Tuesday, February 17, 2015

சிவராத்திரி விஷேசமானது ஏன்?

சிவராத்திரி விஷேசமானது ஏன்?
நமது நாட்டு விரதங்களில் இந்து சமயத்தில் சிவபெருமானை வழிபடுபவர்களால் நவராத்திரி , சிவராத்திரி என்ற இரண்டு ராத்திரிகளுமே விஷேசமாகக் கொண்டாடப் படுகிறது. முன்னது அம்பிகையைப் பற்றியது. பின்னது சிவனைப் பற்றியது. ராத்திரி காலத்தில் பூஜை செய்ய வேண்டும் என்பதை இவை மெய்ப்பிக்கின்றன.
ராத்திரி என்பது என்ன?
ராத்திரி என்பது யாதொரு வேலையும் செய்யாமல் இருள் சூழ்ந்து உறங்கும் காலமாம். பகலெல்லாம் வேலை செய்து நாம் தினந்தோறும் இரவில் உறங்குகிறோம். அப்படி உறங்கி எழுந்தால் தான் உடலுக்கு ஆரோக்கியமும் சுறுசுறுப்பும் ஏற்படுகிறது. தூக்கம் இல்லாவிடில் உடலும் மனமும் சுறுசுறுப்பாக வேலை செய்வதில்லை. நமது நன்மையை நாடி சர்வேஸ்வரன் நமக்குத்தந்த வரன் தூக்கமாம். ஆனால் அளவு கடந்தும் தூங்கக் கூடாது. தீர்க்க நித்திரை என்று மரணத்திற்குப் பெயர்.
சிவராத்திரி என்பது என்ன?
எதனால் தூக்கம் வருகிறது? இந்த தூக்கம் அவசியம்தானா? என்று விசாரித்த சிலர் இது ஒரு அரிய பாக்கியம் இன்றியமையாதது என்ற முடிவிற்கு வந்தனர். தூக்கத்தில் சிவன் நம்மை அடைகிறான். இதைத் தூங்குகிறான் என வேதம் மறைவிடமாகக் கூறுகிறது.
பகலெல்லாம் அலைந்து திரிந்த நமது இந்திரியங்களும் உடலும் சக்தியை இழந்து ஓய்வடைகின்றன. அச்சமயம் நமது இருதயத்தில் உள்ள ஈஸ்வரன் நம் ஜீவனை அணைத்து அருகில் அமர்த்துகின்றான். அச்சமயம் கண் காண்பதில்லை. காது கேட்பதில்லை. புத்தி ஒன்றையும் நினைப்பதில்லை. சுகமாகத் தூங்கினேன் என எழுந்த பின் கூறுகிறோம்.
அச்சமயம் நாம் இழந்த சக்தியை சிவன் நமக்கு அளித்து அனுப்புகிறார். இப்படி இம்மண்ணுலகும் விண்ணுலகும் ஒரு சமயம் வேலையை விட்டு இறைவனிடம் ஒடுங்குகிறது.. இதுவே மஹாபிரளயம் எனப்படும். நாம் தினந்தோறும் தூங்குவது தைனந்தினப்ரளயம் எனப்படும்.
நாம் பகலில் வேலை செய்து களைத்துப் போவது போல் உலகெல்லாம் வளர்ச்சி காலத்தில் வேலை செய்து களைப்படைகிறது. அந்த பிரபஞ்சத்திற்கு இழந்த சக்தியை அளிப்பதற்காக சிவன் தனக்குள் லயப்படுத்துகிறார். இதே பிரளயம் எனப்படும். புரலயம் என்பதே பிரளயம் என்றாயிற்று. பிர என்றால் உலகம். லயம் என்றால் இரண்டறக் கலத்தல். பிரளயம் என்றால் உலக ஒடுக்கம் என்பதாகும்.
பிரளயத்தில் இறைவனைத் தவிர ஒரு வஸ்துவும் காணப்படாது. மெழுகில் தங்கப் பொடிகள் உருத் தெரியாமல் மறைவது போல் உலகம் சிவனது சக்தியில் ஒளிந்திருக்கும். சிவனது சக்தியை ப்ரக்ருதி என்றும் மாயை என்றும் கூறுவார்கள். தட்டானைப்போல் பரமன் மெழுகு போன்ற ப்ரக்ருதியில் தங்கப்பொடி போன்ற ஜீவர்களை ஒடுக்குகிறார். தீயில் மெழுகை உருக்கினால் தங்கம் தனியே வருவது போல் சிருஸ்டி காலத்தில் ஜீவர்கள் கர்மாவிற்கு ஏற்றபடி உடல் எடுக்கிறார்கள்.
அப்படி உலகம் சிவனிடம் ஒடுங்கிய நாளே சிவராத்திரி ஆகும். அன்று சிவனைத் தவிர வேறு ஒரு வஸ்துவும் இல்லை. ஆனால் சிவனை விட்டு என்றும் பிரியாத சக்தி மாத்திரம் இருப்பாள். அன்னையான உமையவள் குழந்தைகளான நம் பொருட்டு சிவனை அச்சமயம் பூஜித்தாள். சிவபூஜை இல்லாவிடில் நாம் வாழ முழயாது. உலகம் ஒடுங்கிய பொழுது பார்வதி, சிவனை நாம் சிவமாக (சேமமாக) இருப்பதற்காகப் பூஜித்த தினமே சிவராத்திரி ஆகும். அது மாசி மாத தேய் பிறையாகும்.
நமக்காக தேவி சிவனைப் பூஜித்த தினத்தில் நாம் சிவனைப் பூஜித்தால் தினம் பூஜிப்பதைவிட பன்மடங்கு பயனைத் தரும். அன்று சுத்த உபவாசம் இருந்து இரவு கண் விழித்து நான்கு கால பூஜை செய்பவருக்கு முக்தி தரவேண்டும் என தேவி வேண்டினாள். சிவனும் அப்படியே வரம் தந்தார்.
விஸ்ணு அலங்காரப்ரியன் என்றும் சிவன் அபிசேகப்ரியன் என்றும் சொல்வார்கள். சிவலிங்கத்திற்கு அபிசேகம் செய்யச் செய்ய நமது துன்பம் அகலும் நோய் நீங்கும். மனம் தெளியும். சகல நன்மைகளும் உண்டாகும். நல்ல எண்ணெய் பஞ்சகவ்யம் பஞ்சாமிருதம் நெய் பால்; தயிர் தேன் கரும்புச் சாறு இளநீர் பழரசம் சந்தனம் ஐந்து கலச தீர்த்தம் -இந்த வரிசைக் கிரமத்தில் இந்த வஸ்துக்களால் பதினொரு ருத்ர ஜபத்துடன் அபிசேகம் செய்யவேண்டும். பூஜை செய்யாதவர் பூஜை செய்யும் இடத்தில் இவைகளை அளித்து அபிசேகம் தரிசனம் செய்ய வேண்டும்.
சீக்கிரம் அனுக்கிரகம் செய்யும்; மூர்த்தி சிவன் அதேபோல் சீக்கிரம் கோபமும் உண்டாகும். ஆதலால் அபிசேக திரவியங்களும் சுத்தமாக இருக்க வேண்டும். பூஜை செய்பவரும் சுத்தமாக இருந்து மனம் வாக்கு உடல் மூன்றும் ஒன்றுபட்டு நிதானமாக பூஜை செய்து சிவனருள் பெறலாம்.
நான்கு கால சிவ பூஜைகள்:
சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது. அவ்வாறு பூஜை மேற்கொண்டு பூஜையைச் செய்து முடிக்க முடியாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜையைக்கண்டு களிக்கலாம். அன்று பூராகவும் உபவாசமாக இருந்து வரவேண்டும். பகலில் உறங்கக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.
முதல் சாமம்:- பஞ்சகவ்ய அபிசேகம் - சந்தனப்பூச்சு - வில்வம், தாமரை அலங்காரம் - அர்ச்சனை பச்சைப் பயிற்றுப் பொங்கல் நிவேதனம் - ருக்வேத பாராயணம்.
இரண்டாம் சாமம்:- சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த பஞ்சாமிர்தம் அபிசேகம் - பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல், துளசி அலங்காரம் - வில்வம் அர்ச்சனை - பாயாசம் நிவேதனம் - யசுர் வேத பாராயணம்.
மூன்றாம் சாமம்:- தேன் அபிசேகம் - பச்சைக் கற்பூரம் சார்த்துதல், மல்லிகை அலங்காரம் - வில்வம் அர்ச்சனை - எள் அன்னம் நிவேதனம் - சாமவேத பாராயணம்.
நான்காம் சாமம்:- கரும்புச்சாறு அபிசேகம் - நந்தியாவட்டை மலர் சார்த்துதல், அல்லி நீலோற்பலம் நந்தியாவர்த்தம் அலங்காரம் - அர்ச்சனை - சுத்தான்னம் நிவேதனம் - அதர்வன வேத பாராயணம்.
நீங்களும் சிவராத்திரி பூஜை செய்து பயன் பெறலாமே?

No comments:

Post a Comment