Tuesday, May 12, 2015

பலிபீடம் – வாகனம் – இலிங்கம்

பலிபீடம் – வாகனம் – இலிங்கம்
திருக்கோயிலில் பலி பீடம் என்பது பாசத்தின் அறிகுறி. வாகனம் பசுவை அதாவது உயிரைக் காட்டும் அறிகுறி, கருவறையில் அருவுருவமான சிவலிங்கம் பதியைக் காட்டும் அறிகுறி, ஆன்மா பாசத்தை விட்டுப் பதியை அடைய வேண்டும் என்பதை நாம் உணர்வதற்காகவே இந்த அமைப்பாகும்.
ஆய பதிதான் அருட் சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடல் ஏறு என நிற்கும்
ஆய பலிபீடம் ஆகும் நற்பாசம் ஆம்
ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே
என்பது திருமந்திரம்.
பலி எது?
பலி பீடம் என்றதும் பலி கொடுப்பது – உயிர் பலி இடுவது என்று தவறாகக் கருதி கொண்டுள்ளார்கள் பலர்.
“கொடுமணி இயக்குமின், குறிஞ்சி பாடுமின்,
நறும்புகை எடுமின், பூப்பலி செய்ம்மின்,
காப்புக் கடை நிறுமின்”
என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார். “பூசை செய்யும் போது மணியடிக்க வேண்டும், தோத்திரம் பாட வேண்டும், வாசனைப்புகை எடுக்க வேண்டும், பூவை பலியாகத் தூவ வேண்டும். பூசை செய்வோர் காப்புக் கட்ட வேண்டும்” என்னும் வழிபாட்டு முறை பண்டுதொட்டு இருந்து வந்ததை இளங்கோவடிகள் சுட்டியுள்ளார். தற்காலத்தில் புஷ்பாஞ்சலி என்று கூறுவதையே இளங்கோவடிகள் பூப்பலி செய்தல் என்று தமிழில் குறிப்பிட்டுள்ளார். கோயில்களில் உள்ள பலிபீடம் தத்துவ அமைப்பு உடையது; உயிர்ப் பலி இடுவது ஆகாது

No comments:

Post a Comment