Monday, November 30, 2015

வேள்வி, ஹோமம், யாகம் - ஓர் அறிமுகம்!

வேள்வி, ஹோமம், யாகம் - ஓர் அறிமுகம்!
வேள்வி, யாகம், ஹோமம், ஓமம் என பல்வேறு பெயர்களில் வழங்கப்படும் சடங்கு முறை; நெருப்பினை ஏற்றி அதில் பலவேறு பொருட்களை இட்டு எரிப்பதன் மூலமாக இறைவனை வழிபடும் முறையே ஹோமம் என பொதுமைப் படுத்தி விடலாம். இந்து மரபியலில் வேதகாலத்தில் இருந்தே இத்தகைய சடங்கு முறைகள் வழக்கில் இருந்து வருகிறது. வேறு சில மதங்களிலும் இத்தகைய வழிபாட்டு முறைகள் வழக்கத்தில் இருக்கின்றன.
ஆதி மனிதனின் வாழ்வில் சூரிய வழிபாடு பிரதானமாய் இருந்தது. நெருப்பின் பயன்பாடு அறியப்பட்ட பின்னர், நெருப்பினை சக்திவாய்ந்த சூரிய கடவுளின் பிரதிநிதியாக கருதினர். இதன் தொடர்ச்சியாக தங்களை காத்துக் கொள்ளவும், தங்களது வேண்டுகோள்களை சூரிய கடவுளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் ஊடகமாய் நெருப்பு விளங்கத் துவங்கியது. இந்த புள்ளியில்தான் வேள்வி அல்லது ஹோமங்களின் ஆரம்பப் புள்ளி இருந்திருக்க வேண்டும். கடவுளுக்கு அர்பணிப்பதாக கருதி பொருட்கள், விலங்குகள் சமயங்களில் மனிதர்களைக் கூட யாகத்தில் இட்டு வழி பட்டிருக்கின்றனர்.
யஜுர்வேதத்தில் முப்பது வகையான யாகங்களைப் பற்றிய குறிப்புகள் காணப் படுகின்றன. ஒவ்வொரு கடவுளுக்கும், ஒவ்வொரு தேவதைக்கும் என தனித்
தனியானயாகமுறைகள்கூறப்பட்டிருக்கிறது. யாகத்தில் இட வேண்டிய பொருட்களும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் மாறுபடும். யாகங்களின் மூலம் அந்தந்த தெய்வங்களை திருப்தி செய்து அதன் மூலம் நற் பலன்களைப் பெறலாம்; என்கிற கருதுகோளே காலம் காலமாய் இந்த பழக்கம் தழைத்திருக்க காரணம்.
மத நம்பிக்கைகள் ஒரு புறம் இருந்தாலும் இந்த யாகங்களின் பின்னனியில் அறிவியல் வாதங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதை நிறுவும் வகையில் பலர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த ஆய்வுகளின் தெளிவுகள் அறிக்கைகளாய் பகிரப் பட்டிருக்கின்றன.
ஹோமம் செய்வதனால் உண்டாகும் சிறப்புகளை அகத்தியர் இந்த பாடலில் கூறியிருக்கிறார். திருமூலர் அருளிய திருமந்திரத்தில் பல இடங்களில் ஹோமம் பற்றிய வரிகள் காணக் கிடைக்கின்றன. அவை பின்வருமாறு...
"ஓமத்திலேயும் ஒருத்தி பொருந்தினாள்"
"வின்னா விளம்பிரை மேவிய குண்டத்துச்"
"நாடறிமண்டலம் நலவிக் நலவிக் குண்டத்தும்"
"நின்ற குண்டம் நிலையாறு கோணமாய்"
பழந் தமிழகத்தில் அறுவடை முடிந்த பின்னர் வயலில் எஞ்சியிருக்கும் பயிர்களை கொளுத்தி விடும் பழக்கம் இருந்தது.இன்றும் கூட சில இடங்களில் இதனைக் காணலாம்.இதன் பின்னர் மதம் சார்ந்த நம்பிக்கைகள் இருந்தனவா என்பது தெரியவில்லை.
ஆனால் அறிவியல் ரீதியாக இத்தகைய செயல்கள் நிலத்திற்குத் தேவையான சத்துக்களை தரும்.இதை இங்கே குறிப்பிட காரணம் வரப்புகள் சூழ்ந்த வயல்வெளியில் வளர்த்த தீயின் சுருங்கிய அல்லது சுருக்கிய வடிவமே ஹோம குண்டங்களாயிருக்க வேண்டும். ஏனெனில் ஹோமங்கள் பூமியின் மீதுதான் வளர்த்திட வேண்டுமெனவும் கூறப்பட்டிருக்கிறது.
ஒலியும், ஒளியும் இல்லாத ஒரு வாழ்க்கையை நாம் நினைத்தே பார்க்கமுடியாது. இந்த இரண்டு சக்திகள் நமது வாழ்வில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை கண்ணிழந்த, செவித்திறனற்ற நமது சகோதர, சகோதரிகளை பார்க்கும் போது எவரும் உணரமுடியும்.
ஒலியின் மூலம் அதிர்வுகள், ஒளியின் மூலம் வெப்பம். யாகம் என்பது இந்த இரண்டு சக்திகளை ஒருங்கினைக்கும் ஒரு நிகழ்வு. இந்த ஒருங்கினைப்பு மனித உடலுக்கும், உள்ளத்துக்கும் நன்மை விளைவிப்பதோடு, யாகம் செய்யும் இடத்தின் சுற்றுப்புற சூழலிலும் பாதிப்புகளை உண்டாக்குவதாகவே இந்த அறிவியல் வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன.
அமெரிக்க அறிவியலார் Dr.Howard steingull என்பவர் காயத்ரி மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது ஒரு நொடிக்கு 1,10,000 ஒலி அலைகள் உருவாவதாக கூறுகிறார். இந்த அதிர்வானது உச்சரிப்பவரின் உடலில் ஏற்படுத்தும் விளைவுகளையும் கூறியிருக்கிறார். இது மாதிரி ஒவ்வொரு மந்திரமும் தனித்துவமான அதிர்வுகளை உருவாக்கக் கூடியவை. இம் மாதிரியான மந்திரங்களை ஒத்திசைவுடன் குழுவாக சொல்லும்போது அவை உருவாக்கும் உணர்வுகளையும், அதிர்வுகளை அந்த சூழலில் இருப்பவர்கள் அனுபவித்தே அறியமுடியும்.
யாக தீயினால் உருவாகும் புகையானது மனிதர்களுக்கும் அவர்கள் வாழும் சுற்றுப் புற சூழலிலும் பாதிப்புகளை உண்டாக்குவதாக பல தெளிவுகள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன. மும்பை மாநகரில் இயங்கிவரும் மருத்துவ ஆய்வு நிறுவனமான Haffkine Institute for Training, Research and Testing நிறுவனத்தை நிறுவிய Dr. Waldemar Mordecai Haffkine இது தொடபான பல தெளிவுகளை ஆதாரப் பூர்வமாய் முன்வைத்திருக்கிறார்.
சித்தர்கள் அருளிய ஹோமங்கள் பற்றிய தொடர் திசை மாறுவதாய் கருதிட வேண்டாம். பழமையின் அற்புதங்களை முன் வைக்கும் போது அவை தொடர்பான சமகால தெளிவுகளை இனையாக பகிர்ந்து கொள்வதனால் வாசிப்பனுபவம் மேலும் சுவாரசியமாகும் அல்லவா!. ஹோமங்கள் பொதுவாக ஏதேனும் ஒருவகையான எதிர்பார்ப்புகளை முன்வைத்தே செய்யப் படுகிறது. எண்ணிய எண்ணங்கள் ஈடேறிட, நோய் நொடிகளில் இருந்து காத்துக் கொள்ள, சமூக நன்மைகளை முன்வைத்து என எதிர்பார்ப்புகளே முன்னிலை வகிக்கின்றன.
ஹோமம் செய்வதன் மூலம் தெய்வங்களை திருப்தி படுத்தி பலன்களை அடைந்திடலாம் என்கிற நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும், சமீபத்தையை ஆய்வறிக்கைகள் ஹோமத்தின் பலன்களை அறிவியல் ரீதியாகவும் நிறுவிக் கொண்டிருக்கிறது. ஹோமத்தில் இடும் பொருட்கள் எரிவதனால் உண்டாகும் வேதிவினைகளின் பலன்களாக பின்வரும் பயன்கள் பட்டியலிடப் படுகின்றன.
ஹோமத் தீயினால் உருவாகும் புகையானது மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களில் நோய் உண்டாக்கும் கிருமிகளை அழிப்பதாகவும், மனித உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், ஹோமம் நடக்கும் இடத்தை சுற்றியிருக்கும் நீர்நிலைகள், உண்வுப் பொருட்கள் ஆகியவை நச்சுத் தன்மை அடையாதவாறு பாதுகாப்பதாகவும், காற்றில் பரவியிருக்கும் கரியமிலவாயுவினை சிதைத்து ஆக்சிஜனை அதிகரிப்பதாகவும், ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஹோமத்தில் உருவாகும் புகையானது சூரிய ஒளியோடு கலந்து உருவாகும் ஒளிவேதி சேர்க்கையினால் கதிர் வீச்சுகளில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதாகவும் பட்டியல் தொடர்கிறது. இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன, எதிர்காலத்தில் மேலும் பல புதிய தகவல்கள் நமக்கு வந்து சேரலாம் அவை ஆச்சர்யமாகவுமிருக்கலாம்.
இறுதியாக ஒரு தகவல், யாகம் செய்வதனால் மழை வருமா?, இந்த கேள்வியும் அது தொடர்பான வாத விவாதங்களும் முடிவில்லாதவை. நவீன அறிவியலில் செயற்கை மழை எவ்வாறு உருவாக்கப் படுகிறது என பார்த்தால் விமானங்கள் மூலம் மேகக் கூட்டத்தினிடையே சில்வர் அயோடைட் அல்லது உலர் பனிக் கட்டிகள் தூவப் படுகின்றன. இதன் பொருட்டு மேகங்கள் குளிர்ந்து மழை பெய்கிறது. இந்த உலர் பனிக் கட்டி(dryice) என்பது திண்ம கரியமில வாயுதான். வருணயாகம் என சொல்லப் படும் ஹோமத்தின் மூலம் இத்தகைய ஒரு அறிவியல் நிகழ்வே செயல்படுத்தப் படுகிறது என்கின்றனர். இது தொடர்பாக பகிர்ந்து கொள்ள நிறைய தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறேன். தனியே மின் நூல் ஒன்று எழுதிடும் உத்தேசமிருக்கிறது. அப்போது இந்த ஹோமங்களின் அறிவியலை விரிவாக பகிர முயற்சிக்கிறேன்.
ஹோமம் செய்ய என்னவெல்லாம் வேண்டும்?
யஜுர்வேதத்தில் முப்பது வகையான ஹோமங்கள் குறிப்பிடப் பட்டிருக்கிறது என்று முன்னர் பார்த்தோம். இவை ஒவ்வொன்றும் தனித்துவமான நோக்கத்தை முன்னிறுத்தி செய்யப் படுபவை. எனவே இவற்றில் பயன்படுத்தும் பொருட்களும் வெவ்வேறானவை.பொதுவில் ஹோமங்களில் பயன்படுத்தப் படும் பொருட்களின் வகைகளை யஜுர்வேதம் பின்வருமாறு கூறுகிறது.
பலவகையான மர குச்சிகள் அல்லது விறகு, மூலிகைகள், பல வகையான தானியங்கள், பழங்கள், உலர்பழங்கள், திரவபொருட்களான நெய், பால், உண்வுப்பண்டங்கள், வாசனை திரவியங்கள், ஆடைகள், உலோகங்கள், நகைகள், கால்நடைகள் என பட்டியல் நீள்கிறது. இன்றைய பதிவில் ஹோமங்களில் பயன்படுத்தப் படும் பொருட்களைப் பற்றி நமது சித்தர் பெருமக்கள் கூறியுள்ளதை மட்டும் பார்ப்போம்.
இந்த ஓமத் தீவளர்க்க தேவையான மூலிகைகளை சமித்துக்கள் என்கின்றனர். இனி இந்த சமித்துகள் விவரம் பின்வருமாறு...
ஆல், அத்தி, அரசு, அகில், கருங்காலி, புரசு, அருகு, பூவரசு, நெல்லி, நாவல், எருக்கு, கடுகு ரோகிணி, வன்னி, வெட்டிவேர், மூஞ்சுப்புல், தர்ப்பைப் புல், நாயுருவி, விளாமிச்சி வேர், சந்தனம், நொச்சி, தேவதாரி, மா, போன்ற பல மூலிகைத்தாவரங்களும், விலங்குக் கழிவுகளாய் பெறப்படும் வாசனை திரவியங்களும் அடங்கும்.
மேலும் இவற்றுடன், பசுப்பால், பசுத்தயிர், பசுநெய், கோசலம், மற்றும் கோமயம் பயன் படுத்தப்படுமாம். மேலும் இதில் அனைத்துவகை மூலிகை தாவரங்களும் பயன்படுத்தலாமாம். அத்துடன் தானிய வகைகளும், அனனம், எலுமிச்சை, பருத்தி ஆடைகள் மற்றும் நூல்களும் மேலும் பல பொருட்களும் வழிப்பாட்டின் தேவையைப் பொறுத்துப் பயன் படுத்தபடுகிறது என்கின்றனர்.

No comments:

Post a Comment