Saturday, November 21, 2015

விபீஷணன்

விபீஷணன் ககன மார்க்கமாக வந்து கொண்டிருந்தபோது சுக்கிரீவன் முதலான வானரவீரர்கள் அவனைப் பார்த்துவிடுகிறார்கள். பிரதிகூலர் தொடர்பு விட்டவுடன் அனுகூலர்கடாட்சம் கிட்டிவிடுகிறது. பதிதர்களை விட்டு நீங்கியவுடனே பரம் பாகவத கடாட்சம் கிடைக்கப் பெறுகிறது.
தமபி சொல்லை மதியாத ராவணனை விட்டு, தம்பி சொல்லை மதிக்கும் ராமனை நாடி வருகிறான் விபீஷணன்.
“எல்லைஇல் பெருங்குணத்த இராமன் தாள்இணை புல்லுதும், புல்லி, இப்பிறவி போக்குதும்” என்று கருதிய வண்ணம் காகுத்தனிடம் சரணாகதியடைய வருகிறான்.
ராவணன் தன்னைப் புண்படப் பேசியதும், சிறுவனாகிய இந்திரஜித்தைக் கொண்டு அவமானப்படச் செய்ததும் விபீஷணன் மனதை விட்டு அகலவில்லை. எனவே உறவுகளை எல்லாம் விட்டொழித்து ஸ்ரீராமன் தான் உண்மையான உறவு; அவன் தாங்களையே சரணமாகப் பற்றுகிறேன் என்கிறான்.
ஸோ ஹம் பருஷிதஸ் தேந
தாஸவச்சாவமாநித: I
த்யாக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச
ராகவம் சரணம் கத: II
“பற்றுக பற்றற்றான் பற்றினை
அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”
என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க, பற்றுகளை விட்டால் இறைவனைப் பற்றலாம். இறைவனைப் பற்றினால் பற்றுகளை விடலாமல்லவா?
விபீஷணன் பற்றுகளை விட்டுப் பகவானைப் பற்ற வருகிறான்.
திரௌபதி பற்றுகளை விடும்வரை பரந்தாமன் அருள் செய்யவில்லைய எல்லாப் பற்றுக்களையும் விட்டுவிட்டுக் கண்ணனைச் சரண் புகுந்தாள். ‘கோவிந்தா!’ என்று கதறிக் கைகளைத் தலைக்கு மேல் தூக்கிக் கும்பிட்டாள். திக்கற்ற நிலையிலே அவளுக்கு வேறோர் சொல்லும் சொல்லத் தோன்றவில்லை.
கண்ணீர் ஆறாகப் பெருகிச் சோர, துகில் பற்றியிருந்த கைகள் சோர, மெய் சோர, கோவிந்தா! கோவிந்தா! என்று வாய்விட்டு அலறினாள்.
ஆரா அமுதனின் திருநாமத்தை உச்சரித்த அளவிலே, அவள் நாவில் ஆரா அமுதம் ஊறியது. மெய் புளகாங்கிதமடைந்து உள்ளமெல்லாம் உருகிக் கரைந்தது.
இப்படி உருகிக் கரைந்த நிலையிலும் அணித்தே இருந்த துவாரகையிலிருந்து கண்ணன் நேரில் வந்து அருள் செய்யவில்லை.
அவன் திருநாமமாகிய கோவிந்தநாம சங்கீர்த்தனமே அவளுக்கு அபயமளித்து அவள் மானத்தைக் காத்தது.
கண்ணன் திருநாமம் துகில் வளர்க்கும் சித்துவேலை செய்தது.
இது போலவே இறகிழந்த சம்பாதிமுன், ராமநாமத்தைப் பஜித்த அளவிலே இறகுகள் வானளாவி வளர்ந்தனவாம்.
திரௌபதி கோவிந்தன் நாமத்தை உச்சரித்தாள். அவள் துகில் வளர்ந்து கொண்டே போயிற்று. சம்பாதி ராமன் நாமத்தை உச்சரிக்கவில்லை. சுற்றி நின்ற வானரர்கள்தாம் உச்சரித்தனர் சம்பாதிக்காக; பிறர் பஜித்த அளவிலே ராமநாமம் அவனுக்கு அருள் சுரந்தது.
கண்ணன் பரத்துவநிலையில் அதாவது தெய்வநிலையில் நின்று பக்தர்களைச் சோதித்துக் காப்பான்.
ராமனோ அவதாரநிலையில் அதாவது மனிதநிலையில் பக்தர்களைக் தேடிவந்து தானகவே கருணைபாலித்துக் காப்பான்.
காகுத்தன் கருணையைப் பெறுவதற்கு, சர்வசங்க பரித்தியாகம் அதாவது சகலத்தையும் துறப்பது வேண்டியதில்லை. அவன் எளியார்க்கு இன்னருள் புரியும் எளியவனான சௌலப்யசீலன்.
ஒரு முறை ராமா என்று அவன் திருநாமத்தைச் சொன்னால் போதும் உடனடியாக வந்து பேரருள் புரிவான்.
ஸ்கருதேவ ப்ரபந்நாய தவாஸ்மதி
ச யாசதே I
அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி
ஏதத் வ்ரதம் மம II
ஒருவன் தன் தகுதியின்மையைச் சிந்திக்காமல் என்னை ஒரு முறை சரணம் பற்றினால் போதும்; அவனைச் சகல பூதங்களிடமிருந்தும் ரட்சிப் பேன். இது என் இலட்சியம் என்கிறான் ராகவன்.
என்னை வந்தடைந்து, ‘ஹே ராமா! இந்த ஆத்மா உன்னுடையது’ என்று ஒரு முறை சொன்னபோதிலும் அவனுக்கு அபயம் அளிப்பேன். அவன் எதற்கும் அஞ்ச வேண்டுவதில்லை. இது என் உறுதியான கொள்கை என்கிறான் ராமன்.
மற்ற எந்தக் கொள்கை மாறினாலும் இந்தக் கொள்கை மட்டும் மாறாது.
என்னைச் சரணம் பற்றிய சரணாகதன் என்னை விட்டு விலகப் பார்த்தாலும் நான் அவனை விடாமல் பற்றிக் கொள்வேன் என்கிறது இந்த ராம சரமசுலோகம். ஸர்வதர்மாந் பரித்யஜ்ய என்ற கீதா சரமசுலோகம் போன்று புகழ்ப் பெறுவது இந்த ஸ்ரீராமாயண சரமசுலோகம்.
இதன் மூலம் சரண்யன் சரணாகதனை நான் விடேன் என்ற உறுதிப்பாட்டை வெளியிடுகிறேன்.

No comments:

Post a Comment