Saturday, November 7, 2015

சந்திரன் நம்மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

சந்திரன் பற்றி சொல்லப்படா சூட்சுமங்கள்! – பகுதி 1 

நிலவை, பூமியைச் சுற்றி வரும் ஒரு பொருளாக நாம் அறிவோம். ஆனால் அதுதான் நம்மை ஆட்டிப்படைக்கிறது என்பது தெரியுமா? அது நம்மில் செய்யும் மாயாஜாலங்கள் பற்றி தெரியுமா? தெரியாது… நிலவைப் பற்றி நாம் அறிந்திராத சில அரிய சூட்சுமங்களை கட்டவிழ்க்கிறது இத்தொடர்… கேள்வி மறையியல் நூல்களில் சந்திரனை உவமைக்காகப் பயன்படுத்துவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உண்மையிலேயே மறையியலுக்கும் சந்திரனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? சத்குரு: இரண்டு முட்டாள்கள் இருந்தார்கள். ஒருவன் சொன்னான், “விடுமுறைக்கு நாம் சூரியனுக்குப் போகலாம்” என்றான். அதற்கு இன்னொருவன் சொன்னான், “அங்கு மிகவும் சூடாக இருக்குமே!” அதற்கு முதலாமவன் பதில் சொன்னான், “அப்படியென்றால் நாம் இரவில் போகலாம்”(சிரிக்கிறார்). உங்கள் புரிந்துகொள்ளும் திறன் மிகவும் குறுகியது. அமாவாசை அன்று கூட சந்திரன் இருக்கும் என்பது உண்மை அல்லவா? சந்திரனின் தாக்கம் என்பது நீங்கள் அதனைப் பார்க்கும் நாட்களைவிட பார்க்க முடியாத நாட்களில் அதிகமாக இருக்கும். பெண்களின் சுழற்சி முறை தர்க்க ரீதிக்கு அப்பாற்பட்ட பரிமாணத்தின் ஒரு பகுதி எப்போதும் சந்திரனுடன் தொடர்புடையதாக இருக்கிறது. கரடுமுரடாகக் காணப்படும் நிலப் பகுதியைக் கொண்ட சந்திரனுக்கும் மறையியலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? மனிதனின் பிறப்பு முறை, உடல் உருவாகும் வழிமுறை இவை அனைத்துக்கும் சந்திரனின் சுழற்சியுடன் தொடர்பு இருக்கிறது. ஒரு பெண்ணின் கருத்தரிக்கும் சுழற்சி கூட சந்திரனின் சுழற்சியுடன் தொடர்புடையதாக இருக்கிறது. அதாவது சந்திரன் இந்த கிரகத்தைச் சுற்றிவரும் காலத்திற்கும் மனித உடலில் ஏற்படும் பருவ மாற்றங்களுக்கும் மற்றும் மனித உடல் உருவாகும் வழிமுறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எப்போதும் கணக்கு போட்டு பார்க்கும் தர்க்க ரீதியான மனதை விட்டுவிட்டு உள்ளுணர்வு அடிப்படையில் வாழ்க்கையைப் பார்ப்பதற்கு சந்திரன் மிகவும் முக்கியமான அம்சமாக இருக்கிறது. ஏனென்றால் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள உங்களுக்குள்ளே நீங்கள் ஆழமாகத் தோண்டிப் பார்க்கும்போது, சந்திரனுக்கும் மனித இனப் பெருக்கத்திற்கும் உள்ள தொடர்பு மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. சந்திரனின் பல்வேறு தோற்றங்கள் மனித உடல் மீதும், மனித மனத்தின் அமைப்பு மீதும் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. எனவே தர்க்க ரீதிக்கு அப்பாற்பட்ட பரிமாணத்தின் ஒரு பகுதி எப்போதும் சந்திரனுடன் தொடர்புடையதாக இருக்கிறது. சந்திரனின் வெவ்வேறு நிலைகள் பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் இடையே, மீண்டும் அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் இடையே எத்தனையோ நிகழ்வுகள் நடக்கின்றன. ஒவ்வொரு நாளும் பார்க்கும் சந்திரனின் வெவ்வேறு நிலைகளை மனிதனின் நல்வாழ்வுக்குப் பயன்படுத்த முடியும் என்பது இந்திய கலாச்சாரத்தில் நடைமுறைப் படுத்தப்பட்ட ஒரு பகுதி ஆகும். சந்திரன் என்பது ஒரு பிரதிபலிப்பு. மனிதன் என்பதும் மனிதனின் பார்வை என்பதும் கூட ஒரு பிரதிபலிப்பே. எந்த ஒரு பார்வையும் உண்மையில் ஒரு பிரதிபலிப்புதான். சந்திரனின் இயல்பே பிரதிபலிப்புதான் என்னும்போது, தர்க்க ரீதியாக அலச முடியாத வாழ்க்கை குறித்த ஆழ்ந்த பார்வையும் எப்போதும் சந்திரனுடனேயே உருவகப் படுத்தப்படுகின்றன. சோமா ஆங்கிலத்தில் சந்திரனைப்பற்றி குறிப்பிடும்போது லூனார் (lunar) என்று சொல்வார்கள். பித்து பிடித்தவனைப் பற்றிக் குறிப்பிடும்போது லூனாடிக் (lunatic) அதாவது பித்து பிடித்தவன் என்பார்கள். பித்து பிடித்தலை சந்திரனுடன் ஏன் தொடர்பு படுத்தினார்கள் என்றால், இந்திய கலாச்சாரத்தை தாண்டி மற்ற கலாச்சாரத்தில் உள்ளவர்கள் தர்க்கரீதியானவற்றிற்கு அப்பாற்பட்டவை அனைத்தையும் கிறுக்குத்தனம் என்பார்கள். எவையெல்லாம் தர்க்கரீதியைத் தாண்டி இருக்கிறதோ அவற்றை கிறுக்குத்தனமாக நினைத்தார்கள். ஆனால் இந்த கலாச்சாரத்தில் தர்க்கரீதியானவற்றிற்கு அப்பாற்பட்டவை எப்போதும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்தக் கலாச்சாரத்திலோ சந்திரனை “சோமா” என்பார்கள். சோமா என்றால் போதை மயக்கம் (intoxication) அல்லது மதிமயக்கம் என்று பொருள். போதை மயக்கம் என்றால் மனநோய் என்று பொருளல்ல. இரண்டுக்கும் வேறுபாடுண்டு. எவரும் மன நோயை நாடிப்போவதில்லை. ஆனால், மக்கள் போதை மயக்கத்தை தேடிப் போகிறார்கள். மக்கள் போதை மயக்கத்தை நோக்கி ஏன் போகிறார்கள் என்றால், அவர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் மோசமான தர்க்கத்தை நிறுத்த முடியவில்லை. அந்த தர்க்கங்கள் உலகத்தை தூள்தூளாக்குகிறது. உங்களால் எவருடனும் நட்புடன் இருக்க முடியவில்லை, ஆனால் உங்களுடன் சேர்ந்து மது அருந்தும் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கிறீர்கள். அதற்குக் காரணம் உங்களுடன் உட்கார்ந்து குடிக்கும்போது உங்களுக்குள் ஓரளவு ஒன்றாய் இருத்தல் என்பது உருவாகிவிடுகிறது. உங்களுடைய தர்க்ககுணம், எதிர்ப்பு சக்தி ஆகியவை உருகிப்போய், ஒன்றாகச் சிரித்து, ஒன்றாக பாட்டுப் பாடி, ஒன்றாக அழுது, ஒருவேளை சாக்கடையில் ஒன்றாகப் புரளவும் நேரிடலாம். (சிரிக்கிறார்) அவர்களால் சாதாரணமாக செய்ய முடியாத காரியங்களை எல்லாம் அப்போது செய்கிறார்கள். குளியலறையில்கூட பாட முடியாதவர்கள், குடித்துவிட்டால், பாடவும் ஆடவும் செய்கிறார்கள். ஏனென்றால் போதை மயக்கம் அவர்களை ஓரளவு தளர்த்தி விடுகிறது. எனவே இதுதான் போதை மயக்கத்தின் சாரம். அதுதான் போதை மயக்கத்திற்கான ஈர்ப்பு.

 சந்திரன் பற்றி சொல்லப்படா சூட்சுமங்கள்! – பகுதி 2 
சந்திரனால் ஏற்படும் போதை ஒருவருக்கு என்ன செய்யும்? 

சந்திரனை சோமா என்று ஏன் அழைக்கிறார்கள்? சந்திரனால் ஏற்படும் போதை ஒருவருக்கு என்ன செய்யும்? தெரிந்துகொள்வோம் இப்பகுதியில்… சத்குரு: சந்திரனை சோமா என்பார்கள். சோமா என்றால் போதை மயக்கத்தின் ஆதாரம் என்று பொருள். நிலாக் காயும் நேரத்தில் நீங்கள் எங்காவது போயிருந்தால் அங்கு மின் விளக்குகள் இல்லை என்றால், நீங்கள் சந்திரனை சிறிது உற்றுப் பார்க்க நேர்ந்தால், மெல்ல மெல்ல மதிமயக்கம் ஏற்படுவதை உணர்வீர்கள். இப்படிப் பார்த்திருக்கிறீர்களா? நிலா ஒளியை நீங்கள் உள்வாங்கிக் கொள்வதற்காக சில வேலைகளைச் செய்தால், உண்மையில் குடிபோதை மயக்கம் ஏற்படும். நிலா ஒளியால் மட்டுமே இப்படி ஏற்படும். இது தர்க்க ரீதியானது அல்ல. நிலா ஒளி இல்லாமல்கூட நாம் இதைப் பெறலாம். இருப்பினும் நிலா ஒளி அதைச் சிறப்பாகச் செய்யும். எனவே இந்த காரணத்திற்காகவே சந்திரனை சோமா என்பார்கள். அதாவது சந்திரனை போதை மயக்கத்தின் ஆதாரம் என்றார்கள். பேராசை கொண்ட யோகிகள் நிலா ஒளியை நீங்கள் உள்வாங்கிக் கொள்வதற்காக சில வேலைகளைச் செய்தால், உண்மையில் குடிபோதை மயக்கம் ஏற்படும். நிலா ஒளியால் மட்டுமே இப்படி ஏற்படும். எப்போதும் மதிமயக்கத்திலேயே இருக்கக்கூடிய ஒரு மகிழ்ச்சியை இப்போது யோக விஞ்ஞானம் வழங்குகிறது. யோகிகள் மகிழ்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் சிறிய சிறிய மகிழ்ச்சிகளுடன் திருப்தியடைபவர்களாக இல்லை. அவர்கள் பேராசை மிகுந்தவர்கள். அவர்களுக்குத் தெரியும், ஒயின் ஒரு குவளை குடித்தால், இப்போது சிறிது போதை தரலாம், ஆனால் சில மணி நேரங்களுக்குப் பிறகு ஒன்றும் இருக்காது, நாளை காலையே தலைவலி மற்றும் வேறு சில சுகவீனங்களையும் கொண்டு வந்து சேர்த்து விடும் என்று. அதனால் அவர்கள் போதை வஸ்துகளுக்கு தயாரில்லை. யோகா மூலம் எப்போதும் மதி மயக்கத்திலேயே இருக்கக்கூடிய வித்தையை இப்போது அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள், அதே நேரத்தில் 100 சதவீதம் விழிப்புணர்வாகவும் இருக்க முடிகிறது. எதையோ குடிப்பதாலோ அல்லது ஏதாவது இரசாயனத்தை எடுத்துக் கொள்வதாலோ இது போன்று நீங்கள் இருக்கமுடியாது. இயற்கை உங்களுக்கு இது போன்ற ஒரு சாத்தியத்தை வழங்கியிருக்கிறது. உடல் உற்பத்தி செய்யும் போதை கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில் நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட விஞ்ஞானி முப்பது ஆண்டுகளாக ஆழ்ந்து ஆராய்ச்சி செய்தார். அவர் கண்டுபிடித்தது என்னவென்றால் மனித மூளையில் போதை மருந்துகளை ஈர்க்கும் பகுதிகள் இலட்சக்கணக்கில் அமைந்துள்ளன என்று. இதற்கு தர்க்க ரீதியாக விஞ்ஞானிகள் ஒரே ஒரு விளக்கம் என்ன கூறமுடியும் என்றால், முழு மனித சமுதாயமும் வரலாற்றில் ஒரு நேரத்தில் மரிஜுவானா என்னும் போதை வஸ்துவின் புகையை நுகர்ந்திருக்கிறது என்பதுதான். ஆனால் இது உண்மை அல்ல. அப்படி என்றால் மனித மூளையில் போதை மருந்துகளை ஈர்க்கும் பகுதிகள் இலட்சக்கணக்கில் ஏன் இருக்கின்றன? அதற்குக் காரணம் உங்கள் உடலை ஒரு குறிப்பிட்ட முறையில் பாதுகாத்தால், உடல் தானாகவே போதைப்பொருளை உற்பத்தி செய்யும், மூளைப் பகுதியும் எப்போதும் அதை பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும். பல ஆண்டுகள் ஆழமான ஆராய்ச்சியின் விளைவாக இந்த விஞ்ஞானி என்ன சொன்னார் என்றால், மனித உடல் தானாகவே போதைப்பொருளை உற்பத்தி செய்வதால் அமைதி, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகியவை (வெளியிலிருந்து எந்தவித தூண்டுதலும் இல்லாமல்) உங்களுக்கு உள்ளேயே நிகழும். அதுவே உங்களுடைய மகிழ்ச்சி அல்லது பேரானந்த நிலை என்பதன் ரசாயனக் கலவை ஆகும். ஆனந்தமைடு உருவான கதை எனவே இந்த விஞ்ஞானி, நம் உடலில் இயற்கையாக உற்பத்தியாகும் இந்த ரசாயனக் கலவைக்கு ஒரு பெயர் சூட்ட விரும்பினார். பொதுவாக விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு அவர்கள் பெயர்களையே வைப்பார்கள். இருப்பினும் அவர் ஒரு பொருத்தமான பெயரைத் தேடினார். அதற்காக உலகில் உள்ள பல்வேறு வேதநூல்களையும் படித்துப் பார்த்தார். எந்தப் பெயரும் அவருக்கு திருப்தியாக கிடைக்கவில்லை. பிறகு அவர் இந்தியாவுக்கு வந்தார். இங்கு அவருக்கு “ஆனந்தா”(bliss) அல்லது பேரானந்தம் என்ற பெயர் கிடைத்தது. எனவே அதற்கு அவர் “ஆனந்தமைடு” (anandamide) என்ற பெயரை வைத்தார்.

சந்திரன் பற்றி சொல்லப்படா சூட்சுமங்கள்! – பகுதி 3 
போதைப் பொருள் இல்லாமல் ஆனந்தம்


சந்திரன் நம்மீது ஏற்படுத்தும் தாக்கத்தால் நமக்கு போதை உண்டாகும் என்பதைக் கண்டோம். அந்த போதை நல்லதா கெட்டதா, அதனால் நம் வாழ்க்கை என்னாகும் என்பதைப் பற்றி இந்த வாரப் பதிவில் அறிவோம்… சத்குரு: நீங்கள் உடலில் போதுமான அளவுக்கு ஆனந்தமைடு உற்பத்தி செய்ய முடியும் என்றால், அப்போது நீங்கள் எப்போதும் போதையில் இருப்பீர்கள். ஆனால், விழிப்புடன் முழுதும் விழிப்புடன் இருப்பீர்கள். இருபது ஆண்டுகள் ஆராய்ச்சியில் செலவிடுவதற்கு பதில், என்னைக் கேட்டிருந்தால், வெளியிலிருந்து எந்த வித தூண்டுதலும் இல்லாமலேயே உங்களுக்கு போதையைக் கொடுத்திருப்பேன். வெளியிலிருந்து உள்ளே எதையும் கொடுக்காமல் சாதாரண யோகா மூலம் உங்களை முழுதும் போதையில் மூழ்கடித்து இருப்பேன். எதுவும் செய்யாமல் நீங்கள் இங்கு வெறுமனே உட்கார முடிந்தால், உங்களை முழுக்க முழுக்க போதையில், மது மயக்கத்தில் ஆழ்த்தி இருப்பேன். ஆனால் நீங்கள் முழுவதும் சுய உணர்வுடன் இருப்பீர்கள். சாரயம் தரும் போதை… மிகவும் சிறந்த ஒரு வாழ்க்கையை புரிந்துகொள்வதற்கு ஒரே வழி என்னவென்றால், ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் அதே சமயத்தில் விழிப்புடனும் இருப்பதுதான். சாராயம் மற்றும் போதை மருந்துகளை ஏன் வேண்டாம் என்கிறோம் என்றால், அது உங்களை போதை மயக்கத்தில் (intoxication) ஆழ்த்தி உங்களுடைய விழிப்புணர்வைத் தொலைப்பது மட்டுமின்றி உடல் நலத்தைக் கெடுத்து, உங்களை அழித்துவிடுகிறது. ஒருவேளை இந்த மருந்துகள் உங்களுக்கு மது மயக்கத்தைத் தந்து, அதே நேரத்தில் உங்களை மிகுந்த விழிப்புடனும் கெட்டிக்காரத்தனமாகவும் ஆக்கி உங்கள் உடல் நலத்தில் அற்புதமான விளைவை ஏற்படுத்தும் என்றால், நாம் அனைவருமே அதில் முழுதாக மூழ்கி இருப்போம். உங்கள் உள்ளே இருக்கும் இறைத்தன்மை என்னும் போதை மயக்கத்தைப்பற்றி தெரியாவிட்டால், விழிப்புடன் இருக்கும் மனத்தைப் பற்றி தெரியாவிட்டால், நீங்கள் வாழ்க்கையை முழுவதும் தொலைத்து விடுவீர்கள். மிகவும் சிறந்த ஒரு வாழ்க்கையை புரிந்துகொள்வதற்கு ஒரே வழி என்னவென்றால், ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் அதே சமயத்தில் விழிப்புடனும் இருப்பதுதான். தற்போது மக்களில் பலருக்கும் இருக்கும் பிரச்சினை என்னவென்றால், ஒருவரை தீவிரமான நிலையில் இருங்கள் என்றால், அவர்கள் இறுக்கமாகி விடுகிறார்கள். ஓய்வு நிலையில் இருங்கள் என்றால், ஒரேயடியாக தளர்ந்து போய்விடுகிறார்கள் (சிரிக்கிறார்). கட்டுப்பாடிழந்த நிலை மற்றும் இறுக்கமான நிலை இரண்டிலும் நீங்கள் வாழ்க்கையை இழந்து விடுவீர்கள். தீவிரமான நிலையிலும் அதே சமயத்தில் ஓய்வு நிலையிலும் இருக்க ஒரே வழி – முழுவதும் சுய உணர்வுடனும் அதே சமயத்தில் முழுக்க போதை நிலையிலும் இருப்பதுதான். போதையின் விளைவு? அதாவது, நீங்களே உங்களுடைய போதைப் பொருளை உண்டாக்கி நீங்களே அதை பயன்படுத்துகிறீர்கள். அதன் விளைவாக உங்கள் உடல்நலத்திலும், நல்வாழ்விலும், மனத்தின் விழிப்புணர்விலும், புரிந்துகொள்ளும் திறமையிலும் எல்லாவற்றிலும் சிறந்த விளைவுகள் ஏற்படும். நீங்களே பந்து, மட்டை அத்துடன் பந்தைப் பிடிப்பவரும் கூட, அல்லவா? ஆம். அப்படித்தான் உங்களுடைய அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. அப்படித்தான் ஒவ்வொரு அணுவும் அமைந்துள்ளது. சுயமாகவே அனைத்தும் நிறைந்துள்ளது. அவ்வாறே அணுவின் ஒவ்வொரு சிறு துகளும் உள்ளது. அப்படித்தான் ஒரு தனிமனிதனும் படைக்கப்பட்டுள்ளான். அப்படித்தான் இந்த அண்டமும் உருவாக்கப் பட்டுள்ளது. நான் முன்பே கூறியது போல, இத்தகைய பேரானந்தநிலை என்பது மட்டும் நம் குறிக்கோள் அல்ல. இந்த பேரானந்த நிலை துன்பம் பற்றிய நமது பயத்தை முற்றிலும் நீக்கிவிடும். துன்பம் என்னும் பயத்தை ஒழித்தால்தான் “எனக்கு என்ன ஆகும்” என்ற கவலை நீங்கினால்தான், வாழ்க்கை என்பதை ஆழ்ந்து பார்க்கும் தைரியம் வரும். இல்லை என்றால் வாழ்க்கையைப் பாதுகாக்கவே விரும்புவீர்கள். நீங்கள் பேரானந்த நிலையில் இல்லாவிட்டால், பாதுகாப்பு என்பதே ஒரு பெரிய கவலையாக உங்களுக்கு இருக்கும், அப்படித்தானே? நாம் அதை நன்றாகப் பார்ப்போம். நீங்கள் ஏன் கல்வி கற்றீர்கள்? பாதுகாப்பின் பொருட்டுதான் கல்வியைத் தேடிப் போனீர்கள். வேலை என்றாலும் வியாபாரம் என்றாலும் எல்லாமே பாதுகாப்பைத் தேடித்தான். திருமணம் என்பதும் பாதுகாப்பு பற்றியது தான். அனைத்தும் பாதுகாப்பு குறித்துதான். உடல் பாதுகாப்பு, உணர்வுகள் குறித்த பாதுகாப்பு, மனநலம் குறித்த பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு இதைப்போல் எத்தனையோ பாதுகாப்புகள் உள்ளன. ஆனால் ஒவ்வொன்றுமே பாதுகாப்பைப் பற்றியதுதான். துயரம் பற்றிய அச்சம் தொடர்ந்து அதன் வேலையைச் செய்துகொண்டிருக்கும் வரை, நீங்கள் வாழ்க்கையின் பரிமாணத்தைப்பற்றி ஆழமாகச் சிந்திக்க மாட்டீர்கள். ஆனால் இம்மாதிரி போதையில் மூழ்கி இருந்தால், அதே சமயம் விழிப்புடன் இருந்தால், துயரம் குறித்த அச்சமே உங்களுக்கு இருக்காது. இந்த நிலையில் நீங்கள் எங்கும் போகத் தயாராக இருப்பீர்கள். உங்களை நரகத்திற்குப் போகச் சொன்னால், அங்கும் போவீர்கள். ஏனென்றால் உங்களுக்கு துயரம் குறித்த அச்சமே கிடையாது. நீங்கள் அத்தகைய போதை மயக்க நிலையில் இருந்தால்தான் வாழ்க்கையைப் பற்றி ஆராய்வதற்கு விருப்பமாக இருப்பீர்கள்.



சந்திரன் பற்றி சொல்லப்படா சூட்சுமங்கள்! – பகுதி 4 
அமாவாசை மற்றும் பௌர்ணமியின் முக்கியத்துவம் என்ன?


கேள்வி நீங்கள் சந்திரன் என்பது போதை மயக்கத்திற்கு ஒரு பிறப்பிடம் என்று சொன்னீர்கள். காலம் காலமாக, இந்தியர்களுடைய ஆன்மீகக் கோட்பாடு சந்திரனின் பல்வேறு நிலைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளது. உண்மையில் அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகியவற்றின் முக்கியத்துவம்தான் என்ன? சத்குரு: நீங்களே சொல்லுங்கள், பௌர்ணமி இரவுக்கும் வேறு ஒரு இரவுக்கும் எந்த வேறுபாடும் இல்லையா? நிறைய வேறுபாடுகள் உள்ளன, அப்படித்தானே? ஓரளவு பித்து பிடித்தவர்களைக் கேளுங்கள். அவர்களுக்கு வேறுபாடு நன்றாகவே தெரியும். இப்போது எது முக்கியம் என்றால், ஓரளவு பித்து பிடித்தவர்களை அது ஏன் மேலும் அதிகமாக பித்து பிடிக்க வைக்கிறது? அமாவாசை என்பது பாலுணர்வு சார்ந்ததாகவும், பௌர்ணமி என்பது காதல் தொடர்புடையதாகவும் சொல்ல முடியும். இப்போது இந்த ஒலிபெருக்கியை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதன் சக்தியை, சத்தத்தை சிறிது கூட்டினால், அது சத்தமாக கூக்குரலிட்டு பேசும். பேச்சு ஒன்றுதான், ஆனால் இப்போது சிறிது அதிகமாக ஒலிக்கிறது, தெளிவாகக் கேட்கிறது. அதுபோலத்தான் எல்லாமே. ஓரளவு கிறுக்குத்தனம் இருந்தது. நீங்கள் கொஞ்சம் கூடுதலாக சக்தியைக் கொடுத்தீர்கள் அல்லது சக்தியின் ஓட்டத்தை அதிகப்படுத்தினீர்கள், அதனால் அனைத்தும் பலமடங்கு பெரிதாக்கப் பட்டுள்ளது. இது அன்பு, சிரிப்பு, மகிழ்ச்சி எல்லாவற்றிற்கும் பொருந்தும், பௌர்ணமி தினத்தன்று சக்தி சற்று அதிகமாக இருக்கும். எது சக்தியை சற்று அதிகமாக்குகிறது? இதில் ஓரளவு அழகுணர்வு குணமும் உண்டு. நீங்கள் எதையாவது பார்க்கும்போது அது அழகாக இருந்தால், அதனுடனான உங்கள் உறவு திடீரென்று அதிகமாகும். அப்படித்தானே? எது உங்களுக்கு அவலட்சணமாகத் தோன்றுகிறதோ, அதைப் பார்த்தவுடன் அதனுடனான உங்கள் உறவு, உங்கள் புரிதல் தானாகக் குறைந்துவிடுகிறது. பூர்ண சந்திரனுக்கு ஓரளவு கவர்ச்சி அதிகம். அது நிச்சயம் உங்களுடைய புரிதலை, அதனுடனான உங்கள் உறவை அதிகமாக்குகிறது. பௌர்ணமியில்… மேலும் பூமியும் சந்திரனும் ஒரு குறிப்பிட்ட நிலைக்கோட்டிற்கு வரும்போது ஏற்படக்கூடிய அதிர்வுகள் நேரடியாகவும் சக்தி மிகுந்ததாகவும் இருக்கும். பூரண சந்திரனின் போது, சந்திரனின் ஈர்ப்பு சக்தி மற்ற நாட்களைவிட அதிகமாக இருக்கும். அன்று அலைகள் அதிகமாக உயரும். தண்ணீர் வழிந்தோடி துள்ளிக்குதிக்கும். இதேபோல உங்களுடைய ரத்தமும் உயரமாகத் துள்ளிக் குதிக்க முயற்சிக்கிறது. அந்த நிலையில் மூளைக்குப் போகும் ரத்த ஓட்டம் அதிகமாகிறது. அப்போது, உங்கள் குணம் எதுவாக இருந்தாலும், அது அதிகரிக்கும். நீங்கள் ஓரளவு மனநோய் உடையவராக இருந்தால், மேலும் அது அதிகமாகும். நீங்கள் அமைதியானவராக இருந்தால், நீங்கள் மேலும் அமைதியாக மாறிவிடுவீர்கள். நீங்கள் மகிழ்ச்சியானவராக இருந்தால் அன்று உங்கள் மகிழ்ச்சி மேலும் அதிகமாகும். உங்கள் குணம் எதுவாக இருந்தாலும், அது அப்படியே உயரச் செல்லும். மக்கள் கிறுக்குத்தனத்தைத்தான் அதிகமாக கவனித்திருக்கிறார்கள். ஏனென்றால் மக்களில் பெரும்பாலோர் அந்த நிலையில்தானே இருக்கிறார்கள்? (சிரிக்கிறார்). பௌர்ணமி அன்று கிறுக்குத் தனம் மட்டுமல்ல. அனைத்துமே அதிகமாகக் காணப்படும். நீங்கள் அனைவரிடமும் அன்புடன் இருப்பவர் என்றால், பௌர்ணமி அன்று உங்களுடைய அன்பு கரைபுரண்டு ஓடும். அமாவாசையன்று… சரி, அமாவாசை அன்று எப்படி இருக்கும்? பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் என்ன வேறுபாடு? தியானத்தின் தரம் பௌர்ணமி அன்றும் அமாவாசை அன்றும் பெருத்த வேறுபாடுடன் இருக்கும். தொடர்ந்து தியானம் செய்பவருக்கு பௌர்ணமி நல்லது. சில சடங்குகளுக்கும் சில வழிமுறைகளுக்கும் அமாவாசை சிறந்தது. அமாவாசை இரவன்று உங்களுடைய சக்திகள் முரட்டுத்தனமாக இருக்கும். மதம்பிடித்த யானைபோல உங்களுடைய சக்தி தறிகெட்டுப்போகும். அதனால்தான் அமாவாசை இரவுகளை தாந்திரீகர்கள் பயன்படுத்துவார்கள். அப்போது சக்திகள் மேலும் அதிகமாகும். பௌர்ணமி இரவுகளில் உங்கள் சக்தி சற்று அடங்கி இருக்கும். அடக்கமாகவும், இனிமையாகவும், அழகாகவும் இருக்கும் – காதலைப்போல. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து சொல்லவேண்டும் என்றால், அமாவாசை என்பது பாலுணர்வு சார்ந்ததாகவும், பௌர்ணமி என்பது காதல் தொடர்புடையதாகவும் சொல்ல முடியும். அமாவாசை சற்று கரடுமுரடானது, ஆனால் சக்தி மிகுந்தது. பௌர்ணமி மென்மையான தன்மை படைத்தது. அதன் சக்தியை உங்களால் உணரமுடியாது. அந்த அளவுக்கு நுட்பமானது. குண்டலினியின் செயல்பாடும் அதேபோல்தான் இருக்கும். பௌர்ணமி தினத்தில் அது மெதுவாகவும் மென்மையாகவும் நகரும். அமாவாசை தினத்தில் அது வேகமாகவும் துள்ளிக்குதித்தும் நகரும். பௌர்ணமியின் இருப்பு மிகவும் அற்புதமானது. அன்று சந்திரனின் ஒளி எங்கு பார்த்தாலும் பளிச்சென்று இருக்கும், அனைத்துப் பொருட்களின் மீதும் அரைகுறையாக ஊடுருவிச் சென்று பரவசமூட்டும் அல்லவா? சந்திரன் வெளியிடும் ஒளியும், மென்மையான அதிர்வும் அதன் விளைவாக எல்லாப் பொருட்கள் மீதும் ஒரு புதிய மணம் வீசும். ஒவ்வொரு பொருளும் ஒரு புதிய ஒளியுடன் இருக்கும். சந்திரன் முழு நிலவாக இருக்கும்போது வெளியிடும் அதிர்வும் ஒளியும் மற்ற நாட்களை விட, மற்ற நிலைகளைவிட வித்தியாசமாக இருக்கும். அதேபோல் அதன் காந்தசக்தியும் வேறுபடும். உங்கள் உடல் உள்ளே செயல்படும் ஈடா மற்றும் பிங்களா ஆகிய இரண்டு சக்திகளும் வேறு விதமாக வேலை செய்யும். பிராண சக்தியின் ஓட்டமும் வேறுவிதமாக இருக்கும். உங்கள் இரத்த ஓட்டமும் சற்று வேறுவிதமாக இருக்கும். உங்களுடைய முழு சக்தியும் வேறுவிதமாக செயல்படும். அதற்குக் காரணம் அதிர்வுகளும் மாறி விடுவதால்தான்.


சந்திரன் பற்றி சொல்லப்படா சூட்சுமங்கள்! – பகுதி 5 
அமாவாசையும் பௌர்ணமியும் யார் யாருக்கு உகந்தது?

பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்கள் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதைக் கடந்த வாரம் பார்த்தோம். அவைகளைப் பற்றிய இன்னும் சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த வாரம் காண்போம்… சத்குரு: ஒவ்வொரு நாளும் நீங்கள் பௌர்ணமியின் குளிர்ச்சியாகவே இருக்கமுடியாது என்பதில்லை. இருக்க முடியும். சூரியன் மீதும் சந்திரன் மீதும் உங்களுக்கு ஆளுமை இருக்குமானால், கடுமையான சூரிய ஒளியிலும், நீங்கள் பௌர்ணமியின் குளிர்ச்சி போன்று இருக்க முடியும். இது சாத்தியமானதே. நீங்கள் சில குறிப்பிட்ட கிரியைகளைச் செய்து வந்தால், சூரியவெப்பத்திலும் குளுமையை உணர முடியும். இத்தகைய ஆளுமையும் கட்டுப்பாடும் உங்களுக்குக் கைவருமானால், ஒவ்வொரு நாளும் நீங்கள் பௌர்ணமியின் குளிர்ச்சியை அனுபவிக்க முடியும், ஒவ்வொரு நாளும் பௌர்ணமியாக இருக்க நீங்கள் முடிவெடுக்க முடியும். அல்லது நீங்கள் ஒவ்வொரு நாளும் அமாவாசையாக இருக்கவும் தேர்ந்தெடுக்கலாம். அல்லது எதையும் தேர்ந்தெடுக்காமலும் இருக்கலாம். இயற்கையாக எது நிகழ்ந்தாலும் வாழ்க்கையின் எல்லா நிலைகளையும் அப்படியே அனுபவிக்கலாம். இருப்பு, இருப்பின்மை நீங்கள் உங்கள் உடலைத் துறக்கும்போது, உங்கள் இருப்பு அற்புதமானதாக ஆகிறது. பௌர்ணமி என்பதை ஒரு ஆற்றல்மிக்க இருப்பு (presence) என்றும், அமாவாசை என்பதை இருப்பின்மை (absence) என்றும் கூறலாம். தர்க்கரீதியாக சிந்திக்கும் மனம், ‘இருப்பதை’ சக்தி மிக்கது என்றும் ‘இல்லாத நிலையை’ ஒன்றுமில்லை என்றும் நினைக்கலாம். ஆனால் இது அப்படி அல்ல. எப்படி ஒளி என்பதற்கு ஒரு சக்தி இருக்கிறதோ அதே போல் ஒளியின்மை அல்லது இருள் என்பதற்கும் தனி சக்தி உண்டு. உண்மையில் இருட்டுக்கு ஒளியை விட அதிக சக்தி உண்டு. அப்படித்தானே? இரவு என்பது பகல் என்பதைவிட சக்தி மிக்கது, ஏனென்றால் இருட்டு என்பது ஒளியற்ற நிலை. இருட்டு இருக்கிறது என்று சொல்வது தவறாகும். ஒளி இல்லை அவ்வளவுதான். அதாவது ‘இருக்கும்’ நிலையைவிட ‘இல்லாத’ அந்த நிலை மிகவும் சக்தி வாய்ந்தது. அப்படி இங்கும் நடக்கலாம். கௌதம புத்தர் தன் உடலுடன் இருக்கும்போது செய்ததை விட உடலை நீத்த பிறகு பல மடங்கு செய்ய முடிந்தது. ஆகவேதான் உடலைத் துறத்தல் என்பது மகாசமாதி என்றும் மகாபரிநிர்வாணா என்றும் சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம், இல்லாமை என்பது இருப்பது என்பதை விடப் பெரியது. நீங்கள் உங்கள் உடலைத் துறக்கும்போது, உங்கள் இருப்பு அற்புதமானதாக ஆகிறது. உங்கள் விழிப்புணர்விலும் கூட, நீங்கள் தியானநிலைக்கு சென்றுவிட்டீர்கள் என்னும்போது, உங்கள் இருப்பு இல்லாமல் போய்விடுகிறது. அப்படி நீங்கள் இல்லாமல் ஆகும்போது உங்கள் இருப்பு அபாரமானதாக இருக்கும். உங்கள் இருப்பைக் காட்ட நீங்கள் முயற்சிக்கும்போது, உங்கள் இருத்தலே நடைபெறாது. ஒரு ஆளுமைக்கு இருத்தல் என்பதே கிடையாது. ஆனால் நீங்கள் இல்லாமல் போகும்போது, உங்கள் இருப்பு அபாரமானதாக இருக்கும். அமாவாசையும் அதே போன்றதுதான். படிப்படியாக சந்திரன் மறைந்தது. அப்போது அந்த இல்லாமை என்பது ஒரு குறிப்பிட்ட சக்தியை உருவாக்கியது. ஆகையால்தான் அமாவாசை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கடுமையாக உழைப்பவனாகவும், முரட்டுத்தனமாகவும் கோபாவேசமாகவும் இருக்கும் ஒரு மனிதனுக்கு அமாவாசை என்பது ஒரு முக்கிய அம்சமாகும். அமைதியாகவும் மென்மையாகவும் இருக்கும் மனிதனுக்கு பௌர்ணமி என்பது முக்கிய அம்சமாகும். இரண்டிற்கும் தனித்தனியே சக்தி உண்டு. குணங்கள் என்று பார்த்தால், பௌர்ணமிக்கு அன்பு என்றால் அமாவாசைக்கு முரட்டுத்தனம் எனலாம். நாம் இரண்டையும் பயன்படுத்தலாம். இரண்டும் சக்தியை உடையது. அமாவாசையில் நாம் செய்யும் செயல்முறைகளும் பௌர்ணமியில் நாம் செய்யும் செயல்முறைகளும் மிகவும் வெவ்வேறானது. யாருக்கு பௌர்ணமி? யாருக்கு அமாவாசை? தன்னுடைய ஞானோதயத்திற்கு கௌதமர் பௌர்ணமியைத் தேர்ந்தெடுத்தார். ஆன்மீகப் பாதையில் நடக்க முயற்சி செய்யும் ஒவ்வொரு மனிதனுக்கும் பௌர்ணமி ஒரு முக்கியமான நாள். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய நிகழ்வு ஒன்று நடந்தது. அதன் பிறகு இந்த உலகம் முழுவதும் மாறி விட்டது. அமைதியான வழியில் கௌதமர் இந்த உலகத்தை முற்றிலும் மாற்றினார். மனிதனின் ஆன்மீக தேடுதலில் அவர் ஒரு மாறுபட்ட தரத்தைக் கொடுத்தார். 2500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய அந்த மனிதரின் அவதரிப்பு ஆன்மீகம் குறித்து தேடுவோர்களிடம் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொடுத்தது. ஆன்மீகப் பாதையில் செல்ல நினைக்கும் எந்த ஒரு மனிதனும் கௌதமரை ஒதுக்க முடியாது. கௌதமர் பௌர்ணமி அன்று ஞானம் பெற்றார். முயற்சியற்ற எளிதான பாதையில் செல்ல பௌர்ணமிதான் சிறந்த நாள். சம்யமா (ஒரு வகை தியானப் பயிற்சி) என்னும் பயிற்சியைச் செய்வதற்கு பௌர்ணமி மிகவும் உகந்தது. ஆனால், கடினமான சாதனா எனப்படும் மந்திரம், ஜபம் போன்றவற்றைச் செய்வதற்கு அமாவாசையே சிறந்த நாள். முற்றும்

 

No comments:

Post a Comment