Saturday, November 7, 2015

நம் கோபத்திற்கு யார் காரணம்?

நம் கோபத்திற்கு யார் காரணம்? அவர்… இவர்…இவர் என்று பிறரை நோக்கியே நம் விரல்கள் சுட்டிக்காட்டிய படி உள்ளது. கோபத்தின் காரணிகள் என்ன? இதிலிருந்து விடுபட வழி என்ன? சத்குருவின் வார்த்தைகளில் இங்கே… சத்குரு: கோபம் என்பது மற்றவரைப் பற்றியது அல்ல, உங்களைப் பற்றியது. நீங்கள் ஒரு பாறையுடன் கோபமாக இருக்கலாம், மனைவியிடம் கோபப்படலாம், குருவிடமும் கோபித்துக் கொள்ளலாம். இப்படி உங்கள் கோபம் யாருடன் இருந்தாலும், உங்கள் கோபத்திற்கும் இன்னொருவருக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் உங்கள் கோபத்திற்கு அடுத்தவர்தான் காரணம் என்று நீங்கள் நினைப்பதால் மீண்டும் மீண்டும் கோபம் கொள்கிறீர்கள். “கோபம் என்னைப் பற்றியது” என்று நீங்கள் பார்க்கும் பட்சத்தில் அது நிலைத்திருக்காது. கோபம் என்பது கர்மா இல்லை, ஒதுக்கி வைத்தலே கர்மா. உங்களுக்குள் தீவிரமான விருப்பு வெறுப்புகள் இருப்பதால்தான் கோபம் உருவாகிறது. “நான் இப்படி யோசித்து, இப்படி உணர்ந்து, இப்படி வாழ்வதே சிறந்தது” என்று நீங்களே ஒரு முன்முடிவை உருவாக்கி அதில் உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள். நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட அடையாளங்களுடன் வேறொருவர் ஒத்துப் போகாமல் இருக்கும்போது அவர்மீது உங்களுக்கு கோபம் வருகிறது. உங்களுடைய விருப்பு வெறுப்பு தீவிரமாக இருக்கும்போது, நீங்கள் படைத்தலை விலக்கி வைக்கிறீர்கள் என்று அர்த்தம். “எனக்கு இது மிகவும் பிடிக்கும்“ என்று நீங்கள் சொல்லும்போது, படைப்பின் பிற அம்சங்களை ஒதுக்கி வைக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் விருப்பு – வெறுப்பு எத்தனைக்கு எத்தனை தீவிரமாகிறதோ அத்தனைக்கு அத்தனை நீங்கள் படைப்பின் பிற அம்சங்களை ஒதுக்கி வைக்கிறீர்கள். நீங்கள் யாரோ ஒருவரையோ, ஏதோ ஒரு பொருளையோ உங்களில் ஒரு பாகமாக இணைத்துக் கொள்ளாததால், கட்டுக்கடங்காமல் கோபம் வருகிறது. கோபம் என்பது கர்மா இல்லை, ஒதுக்கி வைத்தலே கர்மா. நீங்கள் சரியான திசையில்தான் பயணம் செய்கிறீர்களா இல்லையா என்பதை சுட்டிக் காட்டும் கருவி கோபம். விடுதலையை நோக்கிய நம் பயணத்தில், விலக்கி வைத்தல் என்பது கிடையவே கிடையாது, அனைத்தையும் அரவணைத்துக் கொள்ளுதல் மட்டுமே இங்குண்டு. விலக்கி வைப்பதால் நீங்கள் சிறைப்பட்டுக் கொள்கிறீர்கள். சேர்த்துக் கொள்வதால் நீங்கள் விடுதலை அடைகிறீர்கள். உங்களுக்குள் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் இணையும் பொழுது நீங்கள் விடுதலை அடைகிறீர்கள்.

No comments:

Post a Comment