Tuesday, January 12, 2016

12 சங்கராந்திகள்!

12 சங்கராந்திகள்!
சூரியன் ஒரு ராசியை கடந்து அடுத்த ராசிக்குள் நுழையும் வேளையே சங்கராந்தி. மாதப்பிறப்பும் இதுவே.அந்த வகையில் வருடத்திற்கு 12 சங்கராந்திகள் உண்டு.
1. தான்ய சங்கராந்தி(சித்திரை): சூரியன் மேஷராசியில் நுழையும் வேளையே தான்ய சங்கராந்தி.சூரியனை பூஜித்து தானிய தானம் செய்வதன் மூலம் ஆயிரம் அக்னி ஹோத்திரம் செய்த பலனை அடைவார்கள்.
2. தாம்பூல சங்கராந்தி (வைகாசி):சூரியன் ரிஷப ராசியில் நுழையும் வேளையே தாம்பூல சங்கராந்தி.இந்த நாளில் சூரிய பூஜை செய்து வெற்றிலை பாக்கு திரவியங்கள் வைத்து தம்பதிகளை பூஜித்து அதை அளித்தல் மகா புண்ணியம்.
3. மனோதர சங்கராந்தி(ஆனி): சூரியன் மிதுன ராசியில் நுழையும் வேளை மனோதர சங்கராந்தி இந்த நாளில் சூரிய பூஜை செய்து வெல்லம் வைத்து பூஜித்து தானம் அளித்தால் ஆசைகள் நிறைவேறும்.
4. அசோக சங்கராந்தி(ஆடி): சூரியன் கடகராசியில் நுழையும் வேளையை அசோக சங்கராந்தி என குறிப்பிடுவதுண்டு.இது விஸ்வத் புண்ய காலமாகும்.
5. ரூப சங்கராந்தி(ஆவணி): சூரியன் சிம்ம ராசியில் நுழையும் வேளை ரூப சங்கராந்தி.இந்த வேளையில் சூரிய பூஜை செய்து பொன் பாத்திரத்தில் நெய் வார்த்து வேதியர்களுக்கு தானம் அளித்தால்,நோய்கள் அண்டாது.
6. தேஜ சங்கராந்தி (புரட்டாசி): சூரியன் கன்னி ராசியில் நுழையும் வேளையை தேஜ சங்கராந்தி என்பர்.செந்நெல் அரிசி கொண்டு அதன்மேல் கலசம் வைத்து மோதகம் முதலானவை நிவேதித்து வேதியர்களுக்கு விருந்தளிக்க வேண்டும்.
7. ஆயுள் சங்கராந்தி (ஐப்பசி): சூரியன் துலாம் ராசியில் நுழையும் வேளையை ஆயுள் சங்கராந்தி என அழைப்பர். பசும்பால் வெண்ணெய் இவற்றை கும்பத்தில் நிரப்பி பூஜித்து தானம் கொடுப்பதால் நீண்ட ஆயுள் தங்கும்.
8. சவுபாக்ய சங்கராந்தி (கார்த்திகை):சூரியன் விருச்சிக ராசியில் நுழையும் வேளையை சவுபாக்ய சங்கராந்தி நாளாக அழைப்பர்.சூரிய பூஜை செய்து வஸ்திரம் சார்த்தி வேதியர்களுக்குத் தானம் செய்ய வேண்டும்.இதில் உப்புதானம் (லவண பர்வதானம்)செய்தால் சகல சவுபாக்யங்களும் பெறலாம்.
9. தனுஷ் சங்கராந்தி (மார்கழி): சூரியன் தனுசு ராசியில் பிரவேசிக்கும் வேளை தனுஷ் சங்கராந்தி.இந்த வேளையில் தீர்த்தத்தை ஒரு கலசத்தில் நிரப்பி பூஜித்து அன்னதானம் இவற்றைச் செய்தால் நினைத்த காரியங்கள் கைகூடும்.
10. மகர சங்கராந்தி (தை): சூரியன் மகர ராசியில் நுழையும் நாள்.இது தேவர்களுக்கு விடியல் காலம் தட்சிணாயன ஆறுமாத காலத்தில் கொடிய உருவம் கொண்டு மனிதர்களையும் புலிகள் உருவம் கொண்டு பசுக்களையும் வருத்திய காரணத்தால் தேவர்களின் வேண்டு கோளை ஏற்று ஈஸ்வரன் தை முதல் தேதியில் இத்தகைய துன்பங்களை நீக்கினார்.12 சங்கராந்திகளில் மகர சங்கராந்தி மிகவும் புண்ணியம் வாய்ந்தது.சூரிய பூஜை மிகவும் விசேஷமானது.
11. லவண சங்கராந்தி(மாசி): சூரியன் கும்ப ராசியில் நுழையும் வேளையை லவண சங்கராந்தி என அழைப்பர்.இந்த நல்ல நாளில் சூரிய பூஜை செய்வதன் மூலம் மோட்சம் அடையலாம்.
12. போக சங்கராந்தி (பங்குனி): சூரியன் மீன ராசியில் நுழையும் வேளையை போக சங்கராந்தி என அழைப்பார்கள்.பங்குனி மாத ஆரம்பம் முடிவு நாட்களில் சூரியபூஜை செய்து தனதான்யம், பசு முதலானவற்றை தானம் செய்வதன் மூலம் சகல நன்மைகளும் உண்டாகும்.

No comments:

Post a Comment