Wednesday, January 20, 2016

குருமார்கள் ஏன் ஆடம்பரமாக இருக்கிறார்கள்?

விமானத்தில் பயணம் செய்கிறார்கள், தொலைக்காட்சியில் தலைகாட்டுகிறார்கள் என்று குருமார்களை சாடி ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு சத்குரு அளித்த பதில் இந்தப் பதிவில்… கேள்வி சில குருமார்கள் தொலைக்காட்சியில் ஏன் அடிக்கடி தலைகாட்டுகிறார்கள்? குளிரூட்டப்பட்ட அறை, விமானப் பயணம் என்றெல்லாம் ஏன் இவ்வளவு ஆடம்பரமாக வாழ்கிறார்கள்? சத்குரு: தொலைக்காட்சி என்பது தொழில் திறனின் முன்னேற்றம். மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்றவர்கள் மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டுமா? துறவிகள் தங்கள் வேலையை மேம்படுத்திக் கொள்ள பயன்படுத்தக் கூடாதா? லட்சம் பேர் கூடியிருக்கும் இடத்தில், தொழில்திறனைப் பயன்படுத்தி மைக்கில் பேசாமல் குரு எப்படிப் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? நீங்கள் படிக்கும் இந்தக் காகிதத்தில் அச்சாவது கூட தொழில் திறன்தான். குருவிடம் சென்று குருகுல வாழ்க்கை வாழ நீங்கள் தயாரா? துறவிகளும், குருமார்களும் நடந்துதான் போக வேண்டும் என்று நினைக்கிறீர்களா? மாட்டு வண்டியில் பயணம் செய்து ஓரிடத்தை அடைவதற்கு மிகுந்த காலம் பிடிக்கும் என்பதற்காக விமானத்தில் பயணம் செய்வது தவறாகுமா? அட, மாட்டு வண்டி என்பது கூட ஒருவிதத் தொழில் திறன் தானே. வருடத்திற்கு நான்கு முறை வகுப்பெடுப்பதற்கு வெளிநாடுகளுக்கு செல்ல நேர்கிறது. விமானம் இன்றி இது எப்படி சாத்தியம்? வாழ்நாள் மிகக் குறுகியது. வாழ்நாள் முடிவதற்குள் அதை எவ்வளவு ஆழமாக அழுத்தமாக வாழ்கிறோம் என்பதே முக்கியம். எவ்வளவு தூரம் மற்றவர்களுக்குப் பயன்பட முடியும் என்று வாழ்வைப் பற்றிய சிந்தனை உள்ளவர்கள், அதற்காக சில வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதை ஆடம்பரம் என்று எப்படி அர்த்தம் செய்துகொள்ள முடியும்? குரு என்றால் காற்று வராத குகையில் அமர்ந்திருக்க வேண்டும் என்பது உங்கள் எதிர்பார்ப்பா? அவ்வளவு பழமையானவரா நீங்கள்? கற்காலத்தை விட்டு விலகி வாருங்கள். வாழ்வை வளர்ச்சியாகப் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். கேள்வி அன்புக்கும் பரிவுக்கும் வித்தியாசம் இருக்கிறதா? சத்குரு: பரிவு என்பது பொங்கி வரும் வெள்ளத்தைத் துணியால் தடுக்கப் பார்ப்பது போலாகும். வெகு சீக்கிரமே அது வேலை செய்யாது என்பதை உணர நேரிடும். பரிவாக இருக்கச் சொல்லி உங்களுக்கு யாரோ போதித்தார்கள். தொடர்ந்து பரிவாகவே இருக்க முயற்சி செய்தால், நீங்கள் ஒரு கட்டத்தில் சலிப்படைவீர்கள். வெறுப்பின் உச்சத்தில், பரிவு காட்டப்பட வேண்டிய தருணத்தில், உங்களுக்குக் கொலைவெறி கூட வந்து விடக்கூடும். அன்பையும் ஆனந்தத்தையும் பற்றி அறியாதவர்கள் தான் பரிவாகவும், நன்றியுள்ளவராகவும் இருக்கச் சொல்லி உங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். என்னில் ஒரு பகுதியாக உங்களை நான் உணரத் துவங்கிவிட்டால், அப்புறம் பரிவும், நன்றியும் காட்ட வேண்டிய அவசியம் ஏது? யாரும் யாருக்கும் பரிவு காட்ட வேண்டியில்லாத நிலையைத் தான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். கேள்வி யாரைக் கண்டு நீங்கள் வியந்து பாராட்டுகிறீர்கள்? சத்குரு: நம் தேசத்தின் கிராமப்பகுதிகளில் இருக்கிறார்கள் அவர்கள். மிக ஏழ்மையான குடும்பங்களில் பிறந்து, கொதிக்கும் தார்ச் சாலையில் காலில் செருப்பு கூட இல்லாமல், புத்தகப் பையைச் சுமந்து கொண்டு, முகம் நிறைந்த புன்னகையுடன் நடந்து செல்லும் பிள்ளைகளைப் பார்க்கும்போது பிரமிக்கிறேன். உற்சாகமும், ஆனந்தமும், முனைப்பும் கொண்ட அவர்களுடைய நடையைப் பார்க்கும் போதெல்லாம் பிரமிப்பில் நெகிழ்ந்து போகிறேன். 

 குருமார்கள் ஏன் ஆடம்பரமாக இருக்கிறார்கள்?

No comments:

Post a Comment