Tuesday, April 19, 2016

விதி என்றால் என்ன?

விதி என்றால் என்ன?
விதி விளையாடி விட்டது. அது அவன் விதி. விதிப்படி நடந்தது என்றெல்லாம் சொல்கிறோமே! இந்த விதி என்பது என்ன? யார் இதை நிர்ணயிக்கிறார்கள்?
ஒருவனுக்கு விதி எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? விதி தான் ஒருவனது வாழ்க்கையை நிர்ணயிக்க வேண்டும் என்றால் நாம் ஏன் ஒரு காரியம் செய்ய முயற்சிக்க வேண்டும். விதிப்படித்தான் எல்லாம் நடக்கும் என்றால் எனக்கு ஏன் ஆசைகள் வர வேண்டும்? நான் அதை அடைய உழைக்க வேண்டும்? எல்லாம் விதி தான் என்றால் வாழ்வில் எனது பங்கு என்ன? இன்னும் இந்த விதியைப் புரிந்து கொள்ள நிறைய கேட்டுக் கொண்டே போகலாம்.
முதலில் இந்த விதி என்ற நம்பிக்கை மூலமாக நமக்கு மனதளவில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதைப் பார்த்து விடுவோம். பிறகு விதி நிர்ணயிக்கப்படும் விதத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்.
விதி என்பது பெரும்பாலும் நமது மன சமாதானத்திற்க்காகவே பயன்படுவதை நம்மால் பார்க்க முடியும். அவன் விதி முடிந்து விட்டது போய் விட்டான். தோற்க்க வேண்டும் என்று விதி அதனால் தான் தோற்றேன். எனக்கு விதிக்கப்படவில்லை அதனால் தான் கிடைக்கவில்லை. அவன் விதி நல்லாயிருக்கு அதான் நல்லா இருக்கான் என்றெல்லாம் சமாதானம் செய்து கொள்வதற்க்காக நாம் விதியைப் பயன்படுத்துகிறோம்.
உண்மையில் இப்படி நமது செயல்பாடுகளால் ஏற்படும் விளைவுகளுக்கு விதி என்ற ஒன்றின் மீது பழிபோடா விட்டால் நம்மில் பலர் மிகப்பெரும் மனநோயாளிகளாக சட்டையைக் கிழித்துக் கொண்டு அலைந்திருப்போம் என்பதே உண்மை. இத்தகைய சமாதானத்திற்கு விதி பயன்படுகிறது
.
இப்போது விதி என்பது எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம். விதி மூன்று வகைகளில் மனித வாழ்வில் விளையாடுகிறது.
ஒன்று. சுய நிர்ணய விதி.
இரண்டு. சமூக விதி.
மூன்று. பிரபஞ்ச விதி.
இவற்றை ஒன்வ்வொன்றாகப் பார்ப்போம்.
1. சுய நிர்ணய விதி.
விதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதே கற்பனைக்கு விளங்காத ஒரு வலைப்பின்னலாக இருக்கிறது. இதில் சுய நிர்ணய விதி என்பது என்ன?
எனது வெற்றிக்கும் தோல்விக்கும் நானே விதியை நிர்ணயம் செய்து கொள்கிறேனா? எப்படி எனது வாழ்க்கைக்கான விதியை என்னால் நிர்ணயம் செய்து கொள்ள முடியும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்...முடியும் . உங்கள் விதி உங்களாலேயே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல். புரிந்திருக்காது. புரியவைக்க முயற்சிக்கிறேன்.
சுய நிர்ணய விதியைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அடிப்படையில் மறுபிறப்பு என்பதை நம்ப வேண்டிய அவசியம் உள்ளது.
பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்
அர்ஜுனனைப்பார்த்துச் சொல்கிறார் "அர்ஜுனா! நீயும் நானும் இந்த மன்னில் பலமுறை பல வடிவங்களில் பிறந்திருக்கிறோம்! அது எனக்குத் தெரியும். உனக்குத் தெரியாது" என்று சொல்லி அர்ஜுனனின் முற்பிறவி பற்றி எடுத்துரைக்கிறார்.
மேலும் மனிதனின் உடல் தான் இறக்கிறது. ஆத்மா என்ற நமது உணர்வு ஸ்வரூபம் இறப்பதில்லை. அத்தகைய ஆத்மா உடலை விட்டுப் பிரியும் போது தான் வாழ்ந்த பூமியில் தனக்கு சொந்த மானவற்றின் மீது பற்றுதல் கொண்டு மறைந்தாலோ, பிடிக்காத விஷயத்தின் மீது அதீத கோபத்துடன் மறைந்தாலோ தனது அடுத்த பிறவியில் தான் விட்டுப்போன உணர்வுகளுக்கு பதில் கிடைக்குமாறு வாழ முயற்ச்சிக்கும். முற்பிறவியின் ஞாபகங்கள் இருக்காததால் தான் எதற்க்காக இப்படி நடந்து கொள்கிறோம் என்று சில நேரங்களில் வாழ்பவர்களுக்குத் தெரியாது.
உதாரணமாக நல்ல தெய்வபக்தியுடன் கூடிய அமைதியாக தர்மத்தைக் கடைபிடித்து வாழும் ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவர் அடிதடியும் முரட்டு குணமுமாக போலீஸ் கேஸ் என்று அலையும் நிலையில் இருப்பார். உங்க குடும்பத்துக்கே இல்லாத புத்தி உனக்கு எங்கே இருந்துடா வந்தது என்ற புரியாமல் கேட்பார்களே அது இப்படித்தான்.
ஒருவன் முற்பிறவியில் என்ன குணத்தில் இருந்தானோ அந்த குணத்தின் மிச்சம் இப்பிறவியில் அவனது அடிப்படைக் குணத்தை நிர்ணயிக்கும்.
இப்பிறவியில் எந்த வகையான குடும்பத்தில் பிறக்கிறானோ அக்குடும்பத்தின் வளர்ப்பு ஒருவனது குழந்தைப்பருவத்தைப் பாதிக்கிறது. அந்த பாதிப்பே அவன் இளமைபருவத்தின் நடவடிக்கைகளுக்கு விதியாக அமைகிறது. அந்த விதிப்படி அவன் இளமைப்பருவத்தில் செய்யும் காரியம் முழுவதும் அவனது வாழ்க்கை முழுவதுக்குமான விதியாக அமைகிறது. இவ்வாறு ஒரு மனிதனின் வாழ்க்கையில் நன்மை தீமைகளுக்கான அடிப்படை விதி நிர்ணயிக்கப்படுகிறது.
2. சமூகத்தாலான விதி
நான் நல்லவனாகத்தானே இருக்கிறேன் எனக்கு ஏன் கெட்டது நடக்க வேண்டும் என்று சில நேரங்களில் குழம்பிப் போவோம். குடும்பம் என்பது மிகச் சிறிய சமூகம். சமூகம் என்பது மிகப் பெரிய குடும்பம். எனவே ஒரு சமூகத்தில் நடக்கும் எல்லா காரியங்களும் நம் குடும்பத்தில் பாதிப்பை விளைவிக்கும். இந்த சங்கிலித்தொடர் இருக்கிறதே இது சமூகத்தால் உண்டாகும் விதி.
உதாரனமாக நமக்கு முந்தைய தலைமுறையில் ஆண் குழந்தை தான் பெரிசு என்று பெண்குழந்தைகளைக் கருவிலேயே கலைத்தார்களானால் இந்த தலைமுறைக்குத் திருமணத்திற்க்குப் பெண்ணே கிடைக்காமல் போகிறது. ஆனால் தனி ஒரு மனிதனுக்கு, தனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று புரியாமல் போகும். ஆனால் இது சமூகத்தின் நடவகிக்கையால் உண்டான விதி. அது நமக்கு சம்மந்தமில்லாமல் நம்மை பாதிக்கும் போது அது சமூகத்தால் உண்டான விதி ஆகும்.
அதேபோல இரு வேறு இனங்களுக்கு இடையே நடக்கும் அடிமைப்போர்கள் அதனால் ஏற்படும் மரணமும் இதற்கு உதாரணமகச் சொல்லலாம்.
இவைகள் கடந்தகாலத்தின் மூலமாக நிர்ணயிக்கப்பட்ட விதிகளாகிறது.
3. பிரபஞ்சத்தால் உண்டாகும் விதி:
சுனாமி. இதை விட இதற்கு சிறந்த உதாரணம் சொல்ல முடியாது. ஆம். இயற்க்கையின் அபரிமிதமான சீற்றத்தால் குவியல் குவியலாக இறந்து போகும் மனிதர்களுக்கு எந்த விதத்திலும் காரண காரியம் சொல்ல முடியாது. ஆனால் இயற்க்கையின் மாற்றம் ஒரு சங்கிலித்தொடர் போல காலங்காலமாக‌ நடந்து வரும். அவைகளும் ஒரு விதிக்கு உட்பட்டே செயல் பட்டு வருவதால் இது பிரபஞ்சத்தால் உண்டாகும் விதியாகும்.
இப்படி ஒருவருக்கு நடக்கும் எந்த ஒரு செயலும் இம்மூன்று விதிக்குட்பட்டே நடக்கும். இந்த அடிப்படை விதிகளைக் கொண்டு வாழ்க்கையில் ஒருவருக்கு நடக்கும் சம்பவங்களை மேக்ரோ முதல் மைக்ரோ வரை கணக்குப்பன்னிப் பாருங்கள். இந்த மூன்று விதிகளையும் மீறி ஒருவரால் வாழ்ந்திருக்க முடியாது.
இப்படி பல நேரங்களில் நமது கட்டுப்பாடில் இல்லாமலேயே நம்மை பாதிக்கும் பல சம்பவங்கள் நமக்கு விதிக்கப்படுவதாலேயே நாம் விதியை நம்புவது நமது விதியாகிறது.
ஆக கடந்தகால இயற்க்கையின் நிகழ்வு, சமூக நிகழ்வு, மனித வாழ்க்கை இவற்றின் விளைவுகள் யாவும் நிகழ்காலத்தின் விதியை நிர்ணயிக்கின்றன. நிகழ் காலத்தில் நாம் வாழும் வாழ்வும் அதன் விளைவும் எதிர்கால விதியை நிர்ணயிக்கிறது. எனவே இதை நன்றாக உணர்ந்து நிகழ்காலத்தில் முடிந்த வரை தர்மங்களிலிருந்து மீறாமல் வாழ்வது எதிர்காலத்தில் நமக்கு நாமே நல்ல விதியை எழுதிக்கொள்வது போல் ஆகும். எழுதுவோமா?
அதெல்லாம் சரி, விதியை மதியால் வெல்ல முடியுமா? முடியும். உதாரணம். மகாத்மா காந்தி. அடிமைகளாக இருப்பது இந்தியர்களின் விதியாக இருந்தது. தனது நிகழ்கால நடவடிக்கைகளின் மூலம் எதிர்கால இந்தியர்களின் விதியை அவர் மாற்றினார்.
சுய நிர்ணய விதி சமூக விதியை மாற்றியது. அதனாலேயே அவர் மகாத்மா என்று அழைக்கப்படுகிறார். சரியா!

No comments:

Post a Comment