Tuesday, June 21, 2016

வாழ்க்கை பயண துன்பங்கள்

வாழ்க்கை பயண துன்பங்கள்
*******************************
கடவுளின் சக்தியை அறிந்தவன் இன்பத்தில் துள்ளுவதுமில்லை. துன்பத்தில் துவளுவதுமில்லை. “வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல்தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை!” ஆனால் நாமோ உணர்ச்சிகளே வாழ்க்கையாக வாழ்கின்றோம். இதுவும் கடந்து போகும் என்னும் பக்குவ நிலை நம்மில் எத்தனை பேருக்கு இருக்கின்றது?
எல்லாவற்றின் மீதும் அளவு கடந்த ஆசை. அடைய வேண்டுமென்ற துடிப்பு அல்லது எதற்கெடுத்தாலும் பயம். எதைச் செய்யப்போனாலும் தயக்கம். அதன் பலனில் சந்தேகம். விளைவு மாறி வந்துவிட்டால் உடனே உலகத்து சோகமெல்லாம் நம்மிடம் தான், எனற மனநிலை.
என்னுடைய நாடகத்தில் இது ஒரு காட்சி என்ற மனநிலையுடன், வருபவற்றை எதிர்கொண்டு, அதனால் பாதிப்பு அடையாமல், அடுத்தது என்ன என்று வாழ்பவர்களே அறிவுடையவர்கள். ஆனால் இது எல்லோருக்கும் சட்டென்று வந்துவிடாது. அறியாமையும் அகந்தையும் உள்ளவரை எல்லாமே கஷ்டம் தான். துன்ப துயரம் தான்.
எனவே தான் ஞானம் பெற்ற நிலையில் கர்மயோகியாக வாழச்சொல்கிறார் முன்னோர்கள். ஞானம் பெற்றவர்களால் தான் சமநிலையில் இருக்க முடியும். எத்தனையோ பாமர மக்கள் எந்தவிதப் படிப்பறிவும் இல்லாமலேயே இத்தகைய பக்குவமடைந்த மனநிலையில் பிரச்னைகளை எதிர் கொள்கின்றனர் என்பதும் ஓர் உண்மை.
“இவ்வாறு விவேகத்தால் விடுதலை பெற்றவன் புலன் இன்பங்களாலும், புறப்பொருட்களாலும் கவரப்படுவதில்லை. அதற்கு மாறாக அவன் தன்னுள்ளே இன்பத்தில் திளைத்து மூழ்குபவனாக இருக்கிறான். இவ்வாறு கடவுளின் கருத்தைச் செலுத்துவதால் தனக்குள்ளே இன்பத்தை அனுபவிப்பவன் இறைவனுடன் பொருந்தி அழியாத இன்பத்தை அடைகின்றான்.”
ஞானியர் தனிமையை நாடுவதன் பொருள் இப்போது புரிகின்றதா? ஆன்ம சாதகர்கள் தனிமையை விரும்ப வேண்டும். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் போன்ற களியாட்டங்களில் ஒன்றுமில்லை என்ற உண்மையை உணர்ந்தவர்களாய் இருக்க வேண்டும்.
ஐம்புலன்களையும் குறைவாகப் பயன்படுத்தப் பழக வேண்டும். பயனற்ற, சிறிதும் நன்மை தராத செயல்களில் புலன்களை ஈடுபடுத்தி அவற்றின் வழி செல்லாமல், புலனடக்கம் கொண்டவர்களாய் இருந்தால் தான் மனம் அடங்கும். மனம் அடங்கிய பின் தான் ஞானவழி திறக்கும்.
ஆத்ம வித்தையை அறியத் துடிக்கும்
நசிகேதன் என்னும் சிறுவன் அதற்குரிய வழியை மரணத்தின் தேவதையான யமனிடம் கேட்கின்றபோது, யமன் அவனது வேண்டுகோளைத் தவிர்க்கிறான். தேவர்களாலும் விளங்கிக்கொள்ள முடியாத அந்த ரகசியம் உனக்கு உதவாது என்று கூறுகிறான்.
சிறுவனோ தொடர்ந்து அதையே தனக்குரிய வரமாகக் கேட்கின்றபோது அவனிடம் உலக இன்பங்களையெல்லாம் பட்டியலிட்டு அவற்றையெல்லாம் அப்படியே வரமாகத் தருவதாக ஆசை காட்டுகிறான். ஆனால் ஞானத்தைப் பெறுவதில் நாட்டம் கொண்ட அச்சிறுவன் அழியக்கூடிய உலக இன்பங்களில் ஆசை கொண்டு புலன்வழிச் செல்ல விரும்பவில்லை.
நீங்கள் தருவதாகச் சொல்கின்ற எல்லாமே அழியக் கூடியவை. எனக்கவை தேவையில்லை. அவற்றையெல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். அழியாத நித்ய சுகத்தைத் தரக்கூடிய ஆத்மஞானத்தைப் பற்றிய விளக்கத்தைப் பெறவே நான் விரும்புகின்றேன். அந்த வரம்தான் எனக்குவேண்டும் என்கிறான்அவன் இப்படிப்பட்ட உறுதியான மனநிலையில் தான் எப்போதும் நிற்க வேண்டும். புற இன்பங்கள் எல்லாமே நிலையற்றவை. அழியக்கூடியவை. ஆன்மாவில் நிலைபெறுவதே முக்திக்கு வழி.
வாழ்க்கைப் போராட்டத்தில் ஏற்படுகின்ற பலவித கஷ்டங்களுக்கும் மூலகாரணம் கடவுளுடன் தனக்குள்ள உறவை ஒருவன் மறந்திருப்பதே ஆகும். கடவுளுடன் தனது உறவை உணர்ந்தவன் உடலால் வாழ்வுச் சிக்கல்களில் சிக்கித் துன்பப்பட்டாலும் கூட விடுதலை பெற்றவனேயாவான்.
தன்னைத் தானே கட்டுப்படுத்தி எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்வதில் மகிழ்ச்சி அடைகின்ற மக்கள் பாவங்கள் ஒழிந்து நித்திய வீட்டில் நிலைபெறுகின்றனர்.”
புலன்களும் போகப்பொருள்களும் சேர்ந்து கிடைக்கச்செய்யும் அனுபவங்கள் எல்லாமே துன்பம் விளைவிப்பவை தாம். ஆரம்பமும் முடிவும் உள்ளவை தான். ஆகையால் அறிவுடையவன் இவற்றில் ஆர்வம் கொள்வதில்லை. இத்தகைய விஷயங்களில் ஈடுபடுவதில்லை. அனுபவிக்கவும் விரும்ப மாட்டான். இதை உணர்வது தான் ஞானம்.
நம் சூழ்நிலைக்கேற்ப நமது வாழ்க்கை அமைகிறது. அதில் வரும் உறவுத் தொடர்புகள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் போன்ற எல்லாமே நமது பாவங்கள் கழிவதற்கும், வந்து சேர்பவர்களின் பாவங்கள் நம்மோடு சேர்ந்து கழிக்கப்படுவதற்கும் தானே தவிர, அவற்றால் ஒருநாளும் உண்மையான இன்பம் கிடைப்பதில்லை. முதலில் இன்பமாகவும், சுகமாகவும் தெரிகின்ற ஒன்றே பிறகு துன்ப மாகவும், சுமையாகவும் ஆகிவிடுகின்றது. இது வாழ்வியல் உண்மை. ஆனால் இந்த உண்மை மறைக்கப்பட்டிருக்கிறது. புலன்களின் வழியாகத்தான் இன்பங்கள் அனுபவிக்கப்படுகின்றன. இவை நிலையற்றவை. நிலையற்ற எதிலுமே ஞானம் அடைந்தவன் ஆர்வம் கொள்வதில்லை.
“எந்த ஒரு மனிதன் இந்த உடலை விட்டு நீங்கும் முன் தன்னைக் கட்டுப்படுத்திப் புலன் இன்பங்களிலிருந்து விடுபட்டு ஆசை, கோபம் இவற்றையும் கட்டுப்படுத்தித் தலை காட்டாமல் செய்துவிடுகிறானோ அவனே யோகியாவான். அவன் தான் தீரனான ஆண்மகன். அவன் இவ்வுலகில் வாழ்கின்றபோதே மகிழ்ச்சியுடனிருப்பான்.”
இப்படிக் காமக் குரோதம் முதலான கீழானவற்றின் தூண்டலிலிருந்து விடுபட்டு விடுவதால் அவனுக்குப் பரம தத்துவத்தில் ஏற்படும் நித்திய சுகம் கிடைக்கிறது. அவன் அதில் லயித்து ஆனந்தமடைகிறான். அவன் ஞானத்தினால் தெளிவடைந்து, தனக்குள்ளே இன்பமுடையவனாய், உள்ளேயே மகிழ்ச்சி காண்பவனாய் வாழ்கின்றன்.
வாழ்க்கைப் போராட்டத்தில் ஏற்படுகின்ற பலவித கஷ்டங்களுக்கும் மூலகாரணம் கடவுளுடன் தனக்குள்ள உறவை ஒருவன் மறந்திருப்பதே ஆகும். கடவுளுடன் தனது உறவை உணர்ந்தவன் உடலால் வாழ்வுச் சிக்கல்களில் சிக்கித் துன்பப்பட்டாலும் கூட விடுதலை பெற்றவனேயாவான். தன்னைத் தானே கட்டுப்படுத்தி எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்வதில் மகிழ்ச்சி அடைகின்ற மக்கள் பாவங்கள் ஒழிந்து நித்திய வீட்டில் நிலைபெறுகின்றனர்.”
கடவுள் சொல்கின்ற இந்த நிலைதான் ஞானியரின் நிலை. இந்த நிலையில் இப்படிப்பட்டவர்கள் தம்மை உணர்ந்தவராய் தான் வேறு, இந்த உடல்வேறு என்றும், தான்வேறு இந்த வாழ்க்கைவேறு என்றும் அறிந்த நிலையில் ஆத்மாவோடு ஒன்றி, உலக விவகாரங்களில் பற்றின்றி ஒட்டியும் ஒட்டாமல், தாமரை இலையின் மீது விடப்பட்ட நீர் எப்படி அந்த இலையோடு ஒட்டாத நிலையில் நிற்கின்றதோ அதேபோல் செய்யவேண்டியவற்றை தியாகமாக நினைத்து செய்கின்றபோது இறை உணர்விலேயே இருந்துகொண்டு, அனைத்தையுமே இறைரூபமாகப் பார்த்து, அன்பு செலுத்தி அன்புமயமாக வாழ்கின்றனர். இப்படிப்பட்ட உயர்ந்தோரால் தான் உலகம் நன்மை அடைகின்றது.
ஞானியரின் நிலைபற்றிக் கேட்ட நாம், எல்லோராலும் இந்த நிலையை அடைய முடியாதா. என்ற கேள்வி நமக்குள்ளும் எழுகின்றதல்லவா? துன்பச்சூழலில் சிக்கித் தவித்துத் தடுமாறிக் கொண்டிருக்கும் நம்மைப் போன்றவர்கள் இப்படிப்பட்ட உயர்ந்த யோக நிலையை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்?
இறைவனை உணர்ந்தவர்களிடம் காமம், குரோதம் சிறிதும் இருக்காது. மனம் அவர்கள் வசமே இருக்கும், அவர்கள் சுய உண்மை நிலையை அறிந்தவர்கள். அவர்களை சாங்கிய யோகி என்பார்கள். அவர்கள் வாழும்போதும் இறந்த பிறகும் இறைநிலை அடைந்தவர்கள் ஆவார்கள்.அப்படிப்பட்ட நிலையைத் தியானத்தால்தான் பெறமுடியும். வெளி விஷயங்களை வெளியிலேயே விட்டுவிட்டு, அதாவது எல்லாப் புலனின்பப் போகப் பொருள்களையும் துறந்துவிட்டுக் கண்களின் பார்வையைப் புருவங்களுக்கு இடையில் நிலை நிறுத்தி, நாசித்துவாரங்களில் சஞ்சரிக்கும் பிராணன், அபானன் என்னும் மூச்சுக்காற்றைச் சமானமாக்கி எல்லாப் புலன்களையும், மனத்தையும், புத்தியையும் தன் வசப்படுத்தி வைத்திருக்கும் சாதகர் ஆசை, பயம், குரோதம் முதலியவற்றைத் துறந்தவராகிறார். இந்நிலையிலேயே நிரந்தரமாய் இருப்பவர் நிச்சயமாய் விடுதலை அடைந்தவரே!
என்ன தான் வெளி விவகாரங்களை ஒதுக்கி சதா பூஜையும், பிரார்த்தனையும் மட்டும் செய்து கொண்டிருந்தாலும் தகுந்த பலன் கிடைக்காது. உலகத் துன்பங்களிலிருந்து விடுபடச் சரியான வழி ஆசையைத் துறத்தல். எல்லாவற்றிற்கும் ஆலாய்ப் பறக்காமல் உடலும் மனமும் முதலில் அடங்க வேண்டும். தியானத்தில் பெற வேண்டும்
வாழ்வில் அமைதி வேண்டுமா?
மனிதன் வாழ்க்கை முழுவதும் விரும்புவது இன்பம்.
மனிதன் வாழ்க்கை முழுவதும் விரும்பாதது துன்பம்.
மனிதனின் வாழ்வில் இன்பம் கிடைத்தாலும் - அது அவன் விரும்பும் அளவு நீடிப்பதில்லை.
மனிதனின் வாழ்வில் துன்பம் வந்தாலோ - அது அவன் விரும்பும் வேகத்தில் நீங்குவதில்லை.
மனிதனின் வாழ்வில் தொடர்கதையே - நீடிக்காத இன்பமும் நீங்காத துன்பமும்
மனிதனின் வாழ்வு இரண்டு பகுதிகள் சேர்ந்தது. ஒன்று மனம் சார்ந்த அகவாழ்வு மற்றொன்று உடல் சார்ந்த புறவாழ்வு. இரண்டும் சேர்ந்ததே மனிதனின் உலகவாழ்வு. அகவாழ்வும் புறவாழ்வும் மிகவும் நெருங்கிய தொடர்புடையவை ஆயினும் அவற்றின் அடைப்படை இயல்புகள் வேறு. அதை புரிந்து கொள்வது அவசியம். மனிதனின் அகவாழ்வும் புறவாழ்வும் அமைதியாக இருந்தால் மட்டுமே அவன் உலகவாழ்வு அமைதியானதாக இருக்கும்.
நமது வாழ்க்கையானது 100% என வைத்துக் கொண்டால்
உள்ளம் சார்ந்த அகவாழ்வு 40% எனவும்
உலகம் சார்ந்த புற வாழ்வு 60% எனவும் வைத்துக் கொள்வோம்.
அகவாழ்வு :
அகவாழ்வில் நம்மை அறியாமல் நமது அடிப்படை இயல்புக்கேற்ப நினைவுகளும், உணர்வுகளும் தானாக தோன்றிக் கொண்டே இருக்கும். இவை நாமாக இயக்காமல் தாமாகவே இயங்கும் நினைவுகளும் உணர்வுகளும் ஆகும். இது மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லை. இன்ப அனுபவம் தரும் உணர்வுகள், நல்ல உணர்வுகள் தான் வரவேண்டும் என்றும், துன்ப உணர்வுகள், கெட்ட உணர்வுகள் வரக்கூடாது என்றும் மனிதன் அகத்தை சீரமைக்க முயலும்போது, கடந்து போன, இறந்து போன அனுபவம் மீண்டும் உயிர் பெறுகிறது.
அகச் செயல்கள் அனைத்தும் நம்மை மீறிய செயல்கள் என்பதையும், நமது மன இயக்கம் அது இயல்புபடி தான் இயங்கும் என்பதையும் நாம் முழுமையாக ஏற்றுக் கொண்டாக வேண்டும். அதை மாற்ற எந்த முயற்சியும் செய்யாமல் சும்மா இருப்பதே அக அமைதிக்கு நல்லது.
அகத்தைப் பொறுத்தவரை நாம் ஒரு குழந்தையாக, ஒன்றுமில்லாத பார்வையாளனாக மாறிவிட வேண்டும்.
புறவாழ்வு
புற வாழ்வு உலகம் சார்ந்த வாழ்வு.
புறச் செயல்கள் சிந்தித்து உணர்ந்து உணர்வோடு செயல்படும் நிலை. நாமாகச் செயல்படும் நிலை. புத்தியையும் புலன்களையும் பயன்படுத்தி செயல்படும் நிலை. மனதால் ஈடுபடும் செயலும் உடலால் ஈடுபடும் செயலும் புறமாகும். புறச் செயல்கள் மூலம் தான் மனிதன் தன் வாழ்வை திட்டமிட்டு செயல்படுத்தியாக வேண்டும்.
புறவாழ்வில் நாம் சட்ட திட்டங்களை மதித்து நடந்தாக வேண்டும்; சமூகத்தோடு ஒத்துப் போக வேண்டும்.
நமது செயல்கள் நமக்கு அமைதி தருவதோடு எவ்வகையிலும் அது பிறருக்கு இடையூறாக அமைந்து விடக் கூடாது. புற வாழ்வில் நல்லது கெட்டது உண்டு. தேவையானது, தேவையற்றது உண்டு. தனக்கும், குடும்பத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும், உலகத்துக்கும் பயனளிக்கக் கூடிய நல்ல செயலைச் செய்ய வேண்டும். செயலின் முக்கியத்துவம் உணர்ந்து, முழு ஈடுபாட்டோடும், உற்சாகமாகவும், பதட்டம் இல்லாமலும் போராடாமலும் செயல்பட வேண்டும்.
அக உணர்வானது தன்னை எந்த வகையிலும் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளூம் அதே சமயம்மனிதன் அந்த உணர்வுகளைத் தன் செயல் பாட்டுத் திறனை மேம்படுத்திக் கொள்ள ஒரு தூண்டுகோளாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நமது செயலானது முடிவுற்றதும் அதுவும் அக உணர்வோடு கலந்து விடுவதால் செயல்களின் விளைவையும் புறக்கணித்து விட வேண்டும். புற உலகைப் பொறுத்த அளவில் நாம் முயற்சியுடன் திட்டமிட்டு செயல்பட்டால் தான் அனைத்தையும் சீராக்க முடியும். எல்லாம் அதுவாகவே சரியாகிவிடும் என்று விட்டுவிட்டால் அவை சரியாகாது.
புறத்தைப் பொறுத்த அளவில் செயலில் தான் தீர்வு இருக்கிறது. புற வாழ்க்கையைப் பொறுத்த அளவில் நாம் ஒரு அறிஞனாக செயல்பட வேண்டும். புறப்பிரச்சினைக்குத் தீர்வு திட்டமிட்ட செயல்பாடு. புறத்தில் எல்லாமே நாம் தான் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து செயலைத் தியானமாக செய்வது கர்மயோகம். புற வாழ்வில் அமைதியைப் பெற நாம் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் சரியான காலத்தில் சரியான முறையில் செய்துவிட வேண்டும். செய்யக்கூடாத எதையும் தவறியும் செய்து விடக்கூடாது. இதன்படி நடந்தால் பெரும்பாலும் புற வாழ்வில் அமைதி கிட்டும்.

No comments:

Post a Comment